கோ பேக் மோடி என்று தி.மு.க’தான் சொன்னது. என்றாலும், ஸ்டாலினை மரியாதையுடன் நடத்தியிருக்கிறார் மோடி” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்டாலினின் தில்லி விஜயம் பற்றி கூறியுள்ளார்.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்துக்கு ஏற்பட்ட எல்லா பாதிப்புகளும் தி.மு.க ஆட்சியில் இருந்தபோதுதான் நடந்திருக்கிறது.
கச்சத்தீவு, ஸ்டெர்லைட், முல்லைப் பெரியாறு, காவிரி உள்பட பல பிரச்சனைகளுக்கு தி.மு.க அரசுதான் காரணம். ஸ்டாலின் வீர வசனம் பேசிக்கொண்டு தில்லி சென்றார். ஆனால், தில்லியில் எதுவும் நடக்கவில்லை.
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்றார் ஸ்டாலின். ஆனால், தற்போது நீட் தேர்வுக்கு தயாராகச் சொல்கின்றார். பொதுமக்களிடம் பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி தி.மு.க மட்டுமே.
தில்லியில் பேட்டி அளிக்கும்போது, உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிறார் ஸ்டாலின். ஆனால், அ.தி.மு.க மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மத்திய அரசுடன் போராடி இருக்கிறது.
ஆனால், அடிமை அரசு என்று விமர்சித்த ஸ்டாலின் தில்லி சென்று என்ன சாதித்தார்? கோ பேக் மோடி என்று தி.மு.க’தான் சொன்னது. என்றாலும், ஸ்டாலினை மரியாதையுடன் நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி” என தி.மு.க’வை கடுமையாக விமர்சனம் செய்தார்.