பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவோர் மற்றும் விற்பனை செய்வோர் குறித்து சலுகைகள், கமிஷன்களை நம்பி ஏமாற வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீப காலங்களில் பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை, கொடுத்தால் அதிகமான பணம் தருவதாக விளம்பரங்கள் வலம் வருகின்றன.
அவ்விளம்பரங்களில் அவர்கள் குறிப்பிடும் எண்கள், குறியடூகளுடன் உள்ள ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களுக்குக் கூடுதல் பணம் மற்றும் கமிஷன் தருவதாகக் கூறுகின்றனர்.
இதை நம்பி ஏமாறும் பொதுமக்களிடம் கட்டணம், கமிஷன், வரி என்ற பெயரில் ஒரு தொகையையும் வசூலித்துவிடுகின்றனர்.
ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வாங்குவதாகவும், அதற்கு பணம் கொடுப்பதாகவும் சில மோசடி கும்பல்கள் விளம்பரம் செய்கின்றன.
இதுகுறித்து புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், மோசடி கும்பல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், எந்தவொரு நிறுவனம் அல்லது நபர்களுக்கு இதுபோன்ற பழைய ரூபாய்கள், நாணயங்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் பரிவர்த்தனை செய்வதற்கும் கட்டணம் மற்றும் கமிஷன் வசூல் செய்வதற்கும் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.
வங்கிகளின் பெயரை இணைத்து வரும், இதுபோன்ற விளம்பரங்களில் பொதுமக்கள்தான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.