எழும்பூர் பகுதியில் மாவா தயாரித்து விற்பனை செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 19.8 கிலோ மாவா மற்றும் இதர மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக்க கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (21.08.2021) மதியம் சுமார் 1.00 மணியளவில் எழும்பூர், வேனல்ஸ் ரோட்டில் வாகனத் தணிக்கைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் பையுடன் வந்த நபரைப் பிடித்து விசாரணை செய்து, பையைச் சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா புகையிலைப்பொருட்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில் அவரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்ட நபர் 1.சுதாகர் (21) என்பது தெரியவந்தது. மேலும் ஐயப்பன்தாங்கல், காமாட்சி நகர் 1-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாவா தயாரித்து சென்னையில் பல்வேறு இடங்களில் விநியோகம் செய்து வந்ததாக சுதாகர் தெரிவித்ததின்பேரில், காவல் குழுவினர் மேற்படி வீட்டை சோதனை செய்து, அங்கு மாவா தயாரித்து விற்பனை செய்து வந்த 2.ஶ்ரீகாந்த்குமார், (21) என்பவரையும் கைது செய்தனர். குற்றவாளி சுதாகர் மற்றும் மேற்படி வீட்டிலிருந்து மொத்தம் 19.8 கிலோ மாவா, 60 கிலோ சீவல் பாக்குகள், மாவா தயாரிக்கும் இதர மூலப்பொருட்கள் 3.2 கிலோ, 2 கிரைண்டர்கள், 1 எடை மெஷின் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மேற்படி வீட்டின் உரிமையாளர் ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளி அரையடி (எ) சண்முகம் ஆகிய இருவரைக் காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் (21.8.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.