
கர்நாடக மாநிலம் யாதகிரி அருகே கொரோனா தடுப்பூசி போட பயந்து கிராம மக்கள் மதுகுடித்து வருகிறார்கள்.
இதனால் தடுப்பூசி போட தினமும் கிராமத்துக்கு வரும் சுகாதாரத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை தொடருகிறது.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் பல்வேறு கொரோனா தடுப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது.
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை கிருமிநாசினியால் கழுவுதல் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து கிராமத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மதுகுடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
அதாவது யாதகிரி மாவட்டம் ஒனகெரே கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போட சுகாதாரத் துறையினர், ஆஷா திட்ட ஊழியர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
ஆனால் கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் தடுப்பூசி போட பயந்துள்ளனர். இதற்காக அவர்கள் ஒரு திட்டம் தீட்டினர். மதுபானம் குடித்தால் கொரோனா தடுப்பூசி போடமாட்டார்கள் என்பதால் அவர்கள் தினமும் காலையிலேயே மதுபானம் குடிக்க தொடங்கினர்.
கடந்த ஒரு வாரமாக இதே நிலை நீடித்து வருவதாகவும், இதனால் தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத் துறையினரும், ஆஷா திட்ட ஊழியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது அவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட சுகாதாரத்துறையினரிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர். சுகாதாரத்துறையும், ஒனகெரே கிராம மக்களிடம் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.