![விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலி.. 1 IMG 20230306 WA0059](https://dhinasari.com/wp-content/uploads/2023/03/IMG-20230306-WA0059-1024x504.jpg)
விருதுநகர் அருகே திங்கள்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் அருகே கோட்டநத்தத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 15க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பேன்ஸிரக வெடிகள் தயாரிக்கப்படுகின்றன.
திங்கள்கிழமை காலை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசுக்கு தேவையான கருத்திரி தயாரிக்கும் பணியை துவக்கினர். அப்போது திரியில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. தீ பிடித்ததில் வெடி விபத்து ஏற்பட்ட 3 அறைகள் தரைமட்டம் ஆகின.
![விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலி.. 2 mcms 2](https://dhinasari.com/wp-content/uploads/2023/03/mcms-2.jpeg)
திரி தயாரிப்பு அறையில் இருந்த சேடபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி, கட்டனூரை சேர்ந்த கருப்புசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
![விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலி.. 3 IMG 20230306 WA0061](https://dhinasari.com/wp-content/uploads/2023/03/IMG-20230306-WA0061-1024x586.jpg)
காயம் அடைந்த இருவரும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இருவரும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிய ஆலை உரிமையாளர் ரமேஷ், போர்மேன் சுப்புராஜ் ஆகியோர் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.