![சங்கரன்கோயில் ஆலயத்தில் வரும் ஆக.23ல் கும்பாபிஷேகம்! - Dhinasari Tamil](https://dhinasari.com/wp-content/uploads/2024/07/sankarankoil-kumbabishekam-thirupani-1024x576.jpg)
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இந்து சைவ-வைணவ ஒருமைப்பாட்டை விளக்கும் ஆலயங்களில் முக்கியமான ஸ்தலமாக விளங்கும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில், வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பிரபலமான தனித்துவமான சிவாலயங்கள் பல உள்ளன அதில் முக்கியமானது சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆகும் இங்கு இந்து மதத்தில் சைவமும் வைணவமும் ஒன்றே என்று உலகுக்கு காட்ட சிவனும் மகாவிஷ்ணுவும் சரி பாதி இணைந்த சங்கரநாராயணர் ஸ்தலம் உள்ளது.
மூலஸ்தானத்தில் சங்கரலிங்கசுவாமி அருள்பாலிக்கிறார் அருகில் பிரசித்தி பெற்ற அம்மன் கோமதி அம்மன் அருள் பாலிக்கின்றார்.
கோவில் சங்கரன்கோவில் நகரின் மையப் பகுதியில் உள்ளது. மிகப் பெரிய கோபுரம், மிகப்பெரிய கட்டிடக்கலை என பாண்டியர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோவில் ராகு கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு நாகராஜர் சன்னிதி மிகவும் பிரபலமான தனித்துவமான சன்னிதியாகும்.
இக்கோவிலில் தினமும் பல்வேறு பூஜை வழிபாடுகள் நடந்தாலும், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் நடைபெறும் கடைசி வெள்ளி சிறப்பு பூஜை வழிபாடு மிகப் பிரபலமானது.
ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட உத்ஸவம் நடைபெறும் இக்கோவில் ஆடி தபசு திருவிழா பிரபலமானது.
இது பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலம் ஸ்தலமாகும். இங்கு புற்று மண் பிரசாதம் பிரபலம்.
இக் கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வருகின்றன. தற்போது கோவிலில் திருப்பணிகள் முடியும் நிலையில், கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் ராஜகோபுரம், சுற்றுப்பிராகாரங்கள், கல் தூண்கள் மற்றும் மூலவர் சன்னதிகள் அனைத்தும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.