தேமுதிகவுக்கு கூட்டணி கதவு திறந்தேயிருக்கிறது. தேமுதிக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி… வரவில்லை என்றாலும் கவலை இல்லை! முடிவு அவர்கள் கையில்தான் உள்ளது என்று கூறியிருக்கிறார் ஜெயக்குமார்!
அக்சயபாத்ரா தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் முதல் கட்டமாக தொடங்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆயிரம் சிறார்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணி என்பது மதவாத, சாதிய கூட்டணி என மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், எங்கள் கொள்கைகள் வேறு, பாஜகவின் கொள்கைகள் வேறு என்றார்.
அதிமுக., கூட்டணி மக்களை நம்பிய கூட்டணி அல்ல, காசு பணத்தை நம்பிய கூட்டணி என கமல் கூறியிருக்கிறார். பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கியதை காசு பணம் என அவர் குறிப்பிடுகிறாரோ என்றார் ஜெயக்குமார்.
எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும்! உரிய மரியாதை கொடுக்கும் இடத்திற்கே தேமுதிக செல்லும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறுகிறார்.. தேமுதிக.,வுக்கு அதிமுக உரிய மரியாதை தரவில்லையா? கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் பேச வரலாம்! பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி. கூட்டணிக்கு வராவிட்டால் ஒன்றும் கவலையில்லை என்றார் ஜெயக்குமார்.