மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு வந்த மோதி, தனது தாயாரிடம் ஆசி பெற்று, கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடம் பேசி, படேல் சிலைக்கு மரியாதை செய்து, பின்னர் தில்லி திரும்பினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக., தலைமையிலான, தேஜகூ, 350 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாவது முறையாக மோதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், குஜராத்துக்கு ஞாயிற்றுக் கிழமை வந்த மோதி, தன் தாயை சந்தித்து, ஆசி பெற்றார்.
முன்னதாக, ஆமதாபாத் வந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, விமான நிலையம் அருகில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் வந்திருந்தார்.
பாஜக., அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தலைவர் அமித் ஷா பேசியபோது…
குஜராத்தில் தொண்டர்களின் உற்சாகம் மேற்கு வங்கத்தையும் சென்றடைய வேண்டும். 2 சீட்களுடன் கணக்கை துவக்கிய பாஜக., இன்று 303 சீட்களை தாண்டியது. குஜராத்தை இரு கை கூப்பி வணங்குகிறேன்.
மோதியை உற்சாகப்படுத்த இங்கே கூடியுள்ளோம். மோதிக்கு நம்பிக்கை அளிக்கும் மாநிலமாக தொடர்ந்து குஜராத் உள்ளது. குஜராத்தில் பாஜக., வலிமை பெற வைத்துள்ளார் மோதி. அவரது வளர்ச்சி யாத்திரை இங்கு தான் தொடங்கியது.
2014, 2019இல் மோதியால் வெற்றி கிடைத்தது! குஜராத்தில் குண்டர்களின் ஆட்சியை மோதி தான் முடித்து வைத்தார். அவர் மீது வைத்த நம்பிக்கையை தேசம் வெளிப் படுத்தியுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோதி மட்டுமே பதிலடி கொடுத்துள்ளார். பயங்கர வாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் கவனம் செலுத்தவுள்ளோம். அவர்களின் இடத்திற்குள் நுழைந்து, அங்கேயே அவர்களைக் கொன்றோம். இந்தியாவை புதிய உச்சத்திற்கு பிரதமர் மோதி கொண்டு சென்றார்.
அவரின் கோஷங்கள் உலகம் முழுவதும் பிரதிபலிக்கின்றன. அவரை உலக நாடுகள் மதிக்கின்றன. ஏழைகளுக்காக கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளார். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் கிடைத்தது… என்று பேசினார்
தொடர்ந்து ஆமதாபாத் பாஜக., அலுவலகம் அருகே நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது…
சூரத் தீ விபத்து பெரும் சோகத்தை அளித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்துடன் உடன் இருக்கிறேன். மாநில அரசுடன் தொடர்பில் உள்ளேன்! மக்களின் ஆசியே எனது பலம். தொண்டர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் கடின உழைப்பினால் வெற்றி கிடைத்துள்ளது.
குஜராத் எப்போதும் எனக்கு துணை நிற்கிறது. பாஜக., அலுவலகத்தில் பல மணி நேரம் பணியாற்றியுள்ளேன். பல விஷயங்களை கற்று கொண்டுள்ளேன். போராடுவதற்கு இங்குதான் கற்றுக் கொண்டேன்.
குஜராத்தை உலக நாடுகள் திரும்பிப் பார்க்கின்றன. தொழிற்சாலைகள் இங்கு அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன. பாஜக, ஆட்சியில் மாநிலம் வளர்ந்துள்ளது. மாநிலத்திற்கு வலிமையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சிக்கான பயணம் இங்குதான் தொடங்கியது. 2014இல் இங்கிருந்து வேதனை யுடன் கிளம்பிச் சென்றேன். குஜராத் மாடல் பல அதிர்வுகளை உண்டாக்கியது. எனது கடமையை முழுமையாக நிறைவேற்ற முயற்சி செய்வேன்.
நாம் தேர்தல் கணிப்புகளை பொய்யாக்கியுள்ளோம். பாஜக., 300 இடங்களுக்கு மேல் பெறும் என்று கூறியதை கிண்டல் செய்தனர். அனைத்து சாதனைகளையும் பாஜக, முறியடித்துள்ளது .
பாதுகாப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் மக்கள் வாக்களித்துள்ளனர். வலிமையான அரசு அமைய மக்கள் வாக்களித்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. தற்போது கடமை அதிகரித்துள்ளது… என்றார்.
பிரதமர் மோடி பேசி முடித்ததும் அங்கே கூடியிருந்த பாஜக, தொண்டர்கள் தங்களது மொபைல் போன்களில் உள்ள டார்ச் மூலம் ஒளியை ஏற்படுத்தி, மோதிக்கான தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
மோதி தனது தாயாரை சந்தித்து வணங்கி ஆசி பெற்றதை ஒடிஸா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக் அழகிய மணல் ஓவியமாக வரைந்திருந்தார்.
#SundayThoughts
Mother’s blessings and love always inspire to serve. Mother India expects a lot from you, @narendramodi Sir! Heartiest congratulations for a historic win! pic.twitter.com/6O0E1KSn4m— Sudarsan Pattnaik (@sudarsansand) May 26, 2019
On landing in Ahmedabad, paid tributes to the great Sardar Patel.
An icon of modern India, his contribution towards nation building is monumental. pic.twitter.com/wRwrWDrqjy
— Narendra Modi (@narendramodi) May 26, 2019