பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி போய் நின்று சிரிக்கும்… இன்று என் பெண்ணோடு பந்து விளையாடிக் கொண்டிருந்தேன்.
எங்கள் அபார்ட்மெண்டில் இருக்கும் basketball ரிங்கில் அவள் போடும் பந்துகள் விழ, நான் போடுவது தரையில் விழ இருவரும் சிரித்துக் கொண்டிருந்தோம்.
முன்பெல்லாம் பெண்கள் பந்து விளையாடினார்களா என்று கேட்க, ஏன் இல்லை தாயாரே பந்து விளையாட்டில் கெட்டிக்காரி என்றேன். பந்தார் விரலி – உந்து மதகளிற்றன் பாசுரத்தில் பந்தார் விரலி என்று நப்பின்னையை அழைக்கிறாள் ஆண்டாள். பூப்பந்து போன்ற மிருதுவான விரலை உடையவள் என்றும், பந்தினை கையில் வைத்திருந்தவள் என்றும் பந்து விளையாட்டில் சிறந்தவள் என்றும் பூர்வாசிரியர் கூறுவார்.
நப்பின்னை ஒரே சமயத்தில் 5 பந்துகளை போட்டு பிடித்து விளையாடுவதில் சிறந்தவள். அவளோடு பந்தாடி () கண்ணன் தோற்றமையால் அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருந்தான். தனக்கு வெற்றியைத் தேடித் தந்த பந்தை ஒரு கையிலும் வெற்றி பரிசாக பெற்ற கண்ணனை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டிருந்தாளாம்.
பந்து ஆர் விரலி – பந்து பொருந்திய கை உடையவள். அதனால் ஆயர் சிறுமியர் அழைக்கும் போது கண்ணனால் வர முடியவில்லை. என்பார்கள். கம்பன் காட்டும் மகளிரும் பந்து விளையாட்டில் சிறந்தவர்கள்.. முருகனை போன்று விளங்கிய ஆண்கள் நந்தவனத்தில் வில்வித்தை பயிலும் போது, அயோத்தி நகர் பெண்கள் சந்தன வனத்தில் நின்று பந்து விளையாடுகிறார்கள். அப்பெண்களின் அணிந்திருந்த சென்பகத்தால் அது செண்பக வனம் போன்று மணம் வீசியது என்கிறான்.
பந்தினை இளையவர் பயில் இடம், – மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்,
சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம்;
நந்தன வனம் அல, நறை விரி புறவம்;
மேலும் அங்கு பந்து விளையாடும் பெண்கள், அங்குமிங்கும் ஓடி விளையாட அவர்களுடைய நகைகளில் இருந்து முத்துக்கள் சிந்துகிறது என்பதை… பந்துகள் மடந்தையர் பயிற்றுவாரிடைச் சிந்துவ முத்தினம் … என்கிறார்..
அப்படியே மிதிலையில் பெண்கள் பந்தாடுவதை பளிங்கு போன்ற பந்து மையிட்ட பெண்கள் பார்வை படும் போது கருப்பாகவும், அவர்களின் சிவந்த கை படும் போது சிவந்தும் காணப்படுகிறது,
மை அரி நெடும் கண் நோக்கம்…
படுதலும் கருகி வந்து,
கை புகில் சிவந்து காட்டும்,
கந்துகம் பலவும் கண்டார்
கந்துகம் என்றால் பந்து என்று பொருள்.
கொட்டையூர் கோடீஸ்வரன் உடனுறை அம்பிகையின் பெயர் கந்துக க்ரீடாம்பிகை. (கந்துக க்ரீடை – பந்து விளையாட்டு.)
அடியவரின் துன்பங்களை பந்தாடுவதால் உலகம்மை இங்கு பந்தாடு அம்மை என்று பெயர்.
செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய் – என்கிறார் திருநாவுக்கரசர்.
பவானி ஆற்றின் கரையில் அமைந்த சங்கமுக நாதேஸ்வரரை பாடும் திருஞானசம்பந்தர்
அரவத்தை அணிந்தவன், எருதேறி வருபவன், தன்னில் ஒரு பாகத்தை பந்தாடும் அன்னைக்கு கொடுத்தவன்
பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி
அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும்
என்று திருநணாவை பாடுகிறார்.
இவை அலைமகளும் மலைமகளும் பந்தார் விரலியாக, பந்தார் விரல் மடவாளாக விளையாடிய பந்து விளையாட்டு.
- ஜெயந்தி ஐயங்கார் (Jayanthi Iyengar)