அலங்காநல்லூர்: தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் நடைமுறையில் உள்ள பயோமெட்ரிக் முறை கொரோனா காலம் என்பதால், தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் பல ஆண்டுகளாக ரேசன் அட்டையை பதிவு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டன. பொருட்கள் உரியவருக்கு கிடைக்கும் வகையில் ஸ்மார் கார்டு மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.
இதையடுத்து அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயோமெட்ரிக் முறையானது ரேசன் கடைகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே, குடிமைப் பொருட்கள் கைரேகை இட்டு பெறப்பட்டு வந்தது.
தற்போது, கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், ரேகை இயந்திரத்தில் பதிவு செய்ய பல குடும்ப அட்டைதாரர்கள் தயக்கம் காட்டி வருவதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆகவே, தமிழக அரசு கொரோனா காலம் முடியும் வரை, ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க குடும்ப அட்டைதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, தமிழக அரசு விரைவில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.