திருப்புகழ்க் கதைகள்: பகுதி – 275
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
எந்தத் திகையினும் – சுவாமி மலை
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர் ஒரு திண்டிமக் கவி என்பது தெரிகிறது. திண்டிமம் என்பது ஒரு வகை கைப்பறை. இப்பறையை முழக்கிக் கொண்டே ஆசு கவியாக அதாவது உடனுக்குடன் செய்யுளை சந்தக் குழிப்புடன் இயற்றி பாட வல்ல புலவராக இவர் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. திருப்புகழ் பாடல்களைக் கூட இப்படி இவரே இயற்றி இவரே திண்டிமத்தில் தாளத்தை முழக்கி முருகப்பெருமானின் கோயில்தோறும் பாடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இதனைப் பகழிக்கூத்தர் என்கிற மற்றொரு முருகனடியாரின் பிள்ளைத்தமிழ் பாடல்களால் அறிகிறோம். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் வரிகள் சில இதற்குச் சான்று பகர்கின்றன. அவை வருமாறு:
பண்தரு பெருங்கவிப் புலமைக்கு நீசொன்ன
படிதிண் டிமம் முழக்க – சப்பாணிப்பருவம் (2)
பாவாணர் மங்கலக் கவிவாழி பாடிப்
பரிந்து திண்டிம முழக்க – சிறுபறை (4)
திண்டிமக் கவியான இவர் இயல்பாகவே ஆசுகவியாக சந்தங்களில் பாடினாலும் திருஞானசம்பந்தரைப் போல சிறப்பாக சந்தப் பாக்களில் பாட வேண்டும் என்ற விருப்பம் உடையவர் என்பது அவரது பாடல்களில் தெரிகிறது. இதையே இவரது வழிபடும் தெய்வமான முருகனிடம் வேண்டி இருக்கிறார்.
புமியதனிற் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல
அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே
என்ற பாடல் வரிகள் சான்று.
திருஞானசம்பந்தர் 16,000 பதிகங்கள் பாடியதாக நம்பியாண்டார் நம்பி கூறுகிறார். அது போல தாமும் பாட வேண்டும் என்று மேற்பாடலில் வேண்டியவர் திருஞானசம்பந்தரைப் போலவே 16,000 திருப்புகழ் பாடியதாகக் கூறுவர். இதை மேற்பாடல் ஒன்றினாலேயே ஊகிக்க வேண்டி இருக்கிறது என்றாலும் இது ஏற்றுக் கொள்ளத் தக்கது என்றே கூறலாம். இந்த 16,000 திருப்புகழ் பாடல்களில் இன்று நம்மிடையே நிலவுவது 1311 பாடல்கள் தான் (வாரியார் சுவாமிகள் பதிப்பின் படி). தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்கள் மேலும் சில பாடல்கள் கிடைத்துள்ளன என்று அவற்றைக் கூட்டிப் பதிப்பித்திருக்கிறார்.
அத்துடன், திருப்புகழ் பாடல்களிலும், கந்தரலங்காரம், கந்தரந்தாதி, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம் சேவல் விருத்தம் போன்ற இவர் பாடியருளிய நூல்களிலும் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு அருணகிரியாரின் வரலாற்றுச் செய்திகளைத் தணிகைமணி அவர்கள் தொகுத்துத் தந்திருக்கிறார். இந்த வரலாறு முழுமையானதாக இல்லை என்றாலும் முற்றிலும் ஆதாரங்களுடன் உள்ளவை எனலாம்.
அருணகிரிநாதர் காலத்தில் திருவண்ணாமலைப் பகுதியை பிரபுடதேவன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான் என்பதை முன்னரே பார்த்தோம். முருகனின் அருள்பெற்ற அருணகிரிநாதர் மீது மட்டற்ற பக்தியும் அன்பும் பூண்டு அவரை உபசரித்து மகிழ்ந்திருந்தான்.
அதே நேரத்தில் சம்பந்தாண்டான் என்னும் பெயருடைய பெரும் தமிழ்ப் புலவனும் மன்னரின் அபிமானத்திற்கு உரியவனாக இருந்தான். சம்பந்தாண்டான் மிகச்சிறந்த புலவன் மட்டுமல்ல, பெரும் தேவி உபாசகன். தன் மந்திர உச்சாடன பலத்தால் காளியின் அருளுக்குப் பாத்திரமானவன். இதுவே அவனது அகந்தைக்குக் காரணமாயிற்று. தனக்கு நிகர் இந்தப் பூமியில் எவனுமிலன் என்று செருக்கோடு மிடுக்காய் உலாவி வந்தான்.
மன்னன் தன்மீது காட்டும் அன்புக்கும் மரியாதைக்கும் இணையாக அருணகிரியாரையும் போற்றி வருவது கண்டு அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. மன்னனைத் தவிர அருணகிரியாருக்கு வெளியிலும் இருந்த புகழைக் கண்டு மனம் குமைந்தான். எப்படியாவது மன்னர் முன்பு அருணகிரியாரை மட்டம் தட்டி மண் கவ்வச் செய்ய வேண்டும் என்று முனைந்து ஒருநாள் அரசர்முன் அருணகிரியாருக்கு சவால் ஒன்று விடுத்தான்.
என்ன அந்தச் சவால்? நாளை காணலாம்.