~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
பாரதியாரின் கண்ணன் பாட்டு – பகுதி – 25,
தீராத விளையாட்டுப்பிள்ளை – சிறுகதை
சின்னக் கண்ணனின் தொல்லைகள் கோகுலத்தில் நாளுக்கு நாள் தாங்க முடியாமல் போய்விட்டது. குழந்தையாய் இருக்கும்போது யசோதை அவனை உரலில் கட்டிப்போட்டாள். இப்பொது அவன் வளர்ந்து சிறுவனாகி விட்டான். தினமும் ஒரு குற்றச்சாட்டு. யசோதையும் நந்தகோபனும் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார்கள். அவ்வாறு கவலையோடு யசோதை வீட்டில் அமர்ந்திருந்தாள். அப்பொது அவளது பக்கத்துவீட்டுக்காரி ஹாசினி வந்தாள்.
அடியே யசோதா ”ஏன் அமைதியில்லாமல் கவலையாக இருக்கிறாய்? உன்னிடத்திலே ஒரு பதட்டம் தெரிகிறதே? என்ன காரணம் எனக் கேட்டாள்.
“ஆமாம். நீ சொல்வது சரிதான். எனக்குச் சில நேரம் சந்தோஷம் சில நேரம் பயத்தால் நடுக்கமாகவும் உள்ளது. இந்தக் கண்ணன் தினமும் ஒரு பிரச்சனையைக் கோண்டு வருகிறான்” என்றாள்.
அதற்கு ஹாசினி, “’என்னத்தை சொல்வேன். நானும் கண்ணனைப் பற்றி உன்னிடத்தில் ஒரு குற்றச்சாட்டு சொல்ல வந்தேன்” என்றாள். ”ஒ, அப்படியா? என்ன செய்துவிட்டான் என் பிள்ளை?” என்று கொபத்தில் குரல் ஓங்கக் கேட்டாள் யசோதை.
”சொல்கிறேன் யசோதா கேள்” என்று ஒரு காலை நீட்டிக் கொண்டு ஒரு காலை மடித்துக்கொண்டு ஒரு தூணில் சாய்ந்து கொண்டு ஆரம்பித்தாள் ஹாசினி.
”உனக்குத் தெரியும் அல்லவா, இந்த தெருவில் 16 வீடுகள், அதில் 13 வீட்டில் இளம் பெண்கள். ஏறக்குறைய ஒரே வயது. சிலதுகள் சற்று பெரியது, மற்றவை சின்னது. ஆனால் அவர்கள் எப்போதுமே உன் பிள்ளையோடுதான் சேர்ந்து விளையாடுவார்கள். நம் பயலும் அவர்களோடு சேர்ந்து கொள்ளாத நாளே இல்லை. ஆண் பிள்ளை என்றாலும் அவனை அவர்களுக்குப் பிடிக்கும். எல்லோரோடும் பேசி மயக்குபவன். அவர்களுக்கு ஜோடியாக விளையாடுபவன். புதிது புதிதாக ஏதாவது சொல்லுவான், செய்வான். அவன் சுவாரசியமானவன் என்று அவனையும் சேர்த்துக் கொள்வார்கள். அங்கு தான் ஆபத்து உருவாகும்”.
”ஏன், என்ன பண்ணுவான்?”
”அவனோடு விளையாடினாலும் தினமும் யாராவது ரெண்டு பெண்ணாவது உன் வீட்டுக்கு வந்து உன்னிடம் அவனைப்பற்றி ஏதாவது ஒரு குறை சொல்லாத நாளே கிடையாது. நீ இல்லாத நேரத்தில் என்னிடம் சொல்லுவார்கள். விளையாட்டு விளையாட்டு விளையாட்டு. தீராத விளையாட்டு அவனுக்கு, குறும்புக்கு மற்றொரு பெயர் கண்ணன் என்றாகிவிட்டது”.
”ஆமாம் ஹாசினி. போன வாரம் ஒரு பெண் வந்தாள். அவள் பெயர் இராதை. கண்ணன் அவளிடத்தில், “இராதே இந்தாடி கொய்யாப்பழம் என்று ஒரு பெரிய கொய்யா பழத்தை எங்கோ மரத்தில் பறித்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்திருக்கிறான். அவள் ‘கண்ணா நீ ரொம்ப நல்லவனடா; எப்படியடா எனக்கு கொய்யாப்பழம் பிடிக்கும் என்பது உனக்குத் தெரியும்?” என்று சொல்லி ஆசையாய் அதை வாங்கி வாயில் வைத்து கடிக்குமுன்பாக மின்னல் வேகத்தில் அவள் வாயில் ஒரு கடி படும் முன்பே அந்த பழத்தைத் தட்டி விட்டிருக்கிறான். அது கீழே விழுவதற்குள் அதை ஒரு கையால் பிடித்துக்கொண்டு தான் ஒரு கடி கடித்து தின்றிருக்கிறான். அவள் அழுது, கெஞ்சிய பின்னர், “இந்தா” என்று கடித்த பழத்தை அவளுக்குக் கொடுத்திருக்கிறான். அந்தப் பெண் முகமெல்லாம் வீங்கியிருக்க, அழுதுகொண்டே, என்னிடம் சொல்ல வந்தாள்.
இப்போது ஹாசினி பேச ஆரம்பித்தாள். “யசோதா இதே போன்று நேற்று என் வீட்டிலே உன்னுடைய கண்ணன் ஒரு திருட்டுத்தனம் செய்தானடி. அதைச் சொல்லவே நான் இங்கு வந்தேன்” என்றாள்.
“ஏண்? என்ன செய்தான்?”
யாரோ ஒருவர் வீட்டிலிருந்து நெய் சர்க்கரை தின்பண்டங்கள் நிறைய கொண்டுவந்தான். அவனுக்கு தான் எல்லா வீட்டிலும் செல்லமாயிற்றே.” கொண்டுவந்தவன் என் மகன்களிடம் எல்லோரும் வாருங்கள் உங்களுக்கும் தருகிறேன்” என்று சொல்ல, அவர்கள் அத்தனைபேரும் ஆசையோடு ஓடி வர, கைக்கெட்டாத உயரத்தில் அதை மேலே வைத்து விட்டு, வேண்டுவோர் எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு தானே கொண்டுவந்தேன்” என்று அவர்களை திண்டாட வைத்துவிட்டான். ரொம்ப கெஞ்சிய பிறகு கொஞ்சம் எடுத்து தந்தான். என்னுடைய மகன்கள் அனைவரும் கத்திக் கதறி அழுது ஒரேயடியாக ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார்கள். கண்ணா ஏன் இப்படிச் செய்கிறாய் எனக் கேட்டதற்கு சும்மா விளையாட்டுக்கு அத்தை எனக் கூறிவிட்டு ஓடிவிட்டான்.
“ஆமாம் ஹாசினி, அழவைப்பதில் அவன் ரொம்ப பொல்லாதவன். ஒரு பெண் ரொம்ப அழகானவள். உன்னைப்பார்த்தால் மான் மாதிரி இருக்கிறாய் என்று அவளைப் பற்றி எல்லோர் எதிரிலும் கண்ணன் புகழ அந்தப் பெண்ணுக்கு உச்சி குளிர்ந்தது. அவள் அவனைச் சுற்றிச்சுற்றி வந்தாள்; அவன் சொன்னதெல்லாம் செய்தாள்; அந்த துஷ்டப் பயல் அருகில் அந்தப் பெண் வந்ததும் நறுக்கென்று அவளை வலிக்க வலிக்க இடுப்பில் கிள்ளி விட்டு ஓடி விட்டான். அந்த பெண் வலியோடு ஓலம் இட்டுக்கொண்டு தன் வீட்டுக்குள் ஓடிவிட்டாள். கேட்க வேண்டுமா அவல் தாய் முகத்தைத் தூக்கிக்கொண்டு இங்கே என்னிடம் முறையிட வந்துவிட்டாள்.”