ஒருவருக்கு தேதி குறித்து விட்டால், அந்த தேதியில் உயிரை எமதர்மன் எடுத்து விடுவார் என்று சொல்லுவார்கள்.
அப்படி ஒரு சிற்பி கந்தனுக்கு தேதி குறித்து விட்டார் எமதர்மன். அந்த தேதி பற்றி சிற்பி கந்தனுக்கும் எப்படியோ தெரிய வந்து விட்டது.*
சிற்பி கந்தனுக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறை தான் பாசக் கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன் படுத்திக் கொள்ள ஒரு யுக்தி செய்தார் கந்தன்
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப் போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார்.
எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்க வைத்து விட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டு படுத்து விட்டார்.
எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டு தான் சிலைகள் என்பதை யூகித்து விட்டார்.
ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத் தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசி விடக் கூடாதே. நேரம் வேறு ஓடிக் கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது.
சத்தமாக வாய் விட்டுச் சொன்னார்,
அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது.
என்னாலேயே எது சிலை எது மனிதன் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே!’
இப்படி சொல்லி விட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார்.
அவர் எதிர் பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது.
தற்பெருமை தான், வேறென்ன!. சடாரென வீசினார் கயிற்றை.
கெடுத்தது எது? தான் என்கிற அகந்தை.
ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மன வருத்தங்கள் மற்றும் சோர்வுகளுக்கு காரணம். நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணம் தான்.
நான் என்ற அகந்தையை விட்டு விட்டு பரந்தாமன் புகழ் பாடி பரமபதம் அடைவோம்