2021லும் அதிமுக., ஆட்சியே அமையும். அதையே அதிசயம் நடக்கப் போகிறது, மக்கள் அதிசயத்தை நடத்தப் போகிறார்கள் என்று ரஜினி கூறியிருக்கிறார் எனக் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை தென்காசி மாவட்ட தொடக்க விழா நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையம் வரும் முதல்வர் அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்
நாளை காலை 9.30க்கு தென்காசி விழா மேடைக்கு முதல்வர் வருகிறார். புதிய மாவடத்தை தொடங்கி வைத்து 100 கோடி ரூபாய் அளவிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் அவர் பிற்பகல் 2.30க்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது குறித்துக் கூறிய போது, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்காசி மாவட்டம் உருவாக்கப் பட்டுள்ளது!
2021ம் ஆண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம்! நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு தான் அதுகுறித்து, விரிவாக பேச முடியும்!
நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தற்போதும் தொடர்கிறது! உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது!
மறைமுக மேயர் தேர்தலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருப்பது விந்தையாக உள்ளது! தமிழகத்தில் மறைமுக தேர்தலை நியாயப்படுத்தி மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் பேசியுள்ளார்!
மேயர் ஒரு கட்சியாகவும், கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் வேறு கட்சியாகவும் இருப்பதால் பிரச்னை என ஸ்டாலினே கூறியுள்ளார்! 2006ல் ஸ்டாலின் சொன்னால் சரி என்கிறார்கள், நாங்கள் செய்தால் தவறு என்கிறார்கள் என்று கூறினார்.