சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தகவல்களை பிஎச் பாண்டியன் வெளியிட்டதை டிவியில் பார்த்த சசிகலா அதிர்ச்சியில் உறைந்தாராம். இதையடுத்து பண்ருட்டி ராமச்சந்திரன், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோரை செய்தியாளர்களை சந்தித்து மறுப்பு தெரிவிக்க அவர் உத்தரவிட்டாராம்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் பல்வற்றை வெளியிட்டார். அவை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் பேட்டியை நேரலையாக டிவியில் பார்த்துக் கொண்டிருந்த சசிகலா அதிர்ச்சியில் உறைந்து போனாராம். உடனே தன் உறவினர்களிடம் ஆவேசமாகப் பேசி, பண்ருட்டி ராமச்சந்திரன், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோரை அழைத்து பி.எச். பாண்டியனுக்கு பதில் தர உடனே பிரஸ் மீட்க்கு ஏற்பாடு செய்ங்க என காட்டமாகக் கூறினாராம். இதை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் இருவரும் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்…
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க பொதுக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது என்று பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார். எம்ஜிஆரை திமுக பொதுக்குழுதான் கட்சியைவிட்டு நீக்கியிருந்தது. எனவே அவர் மனவருத்தம் காரணமாக, பொதுக்குழு மட்டும் இதுபோன்ற முடிவை தீர்மானிக்க கூடாது. எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று ஒரு விதிமுறையை அதிமுகவில் எம்ஜிஆர் கொண்டுவந்தார். வேறு எந்தக் கட்சியிலும் இப்படி ஒரு விதிமுறை கிடையாது.
இப்போது அதிமுகவை வழிநடத்த ஒரு பொதுச்செயலர் தேவை. ஆனால் அனைவரிடமும் வாக்குப்பதிவு நடத்தி பொதுச்செயலரைத் தேர்ந்தெடுக்க போதிய கால அவகாசம் இல்லை என்பதால், பொதுக்குழு கூடி, சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக பரிந்துரை செய்தது.
மேலும், பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்களிப்பு உரிமை பறிக்கப்படவில்லை. தேவைப்படும்போது பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில் பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும்.
தற்போதைக்கு பொதுச்செயலராக நியமிக்க பொதுக்குழு சட்டத்தில் வாய்ப்புள்ளது. ஆனால் பி.எச்.பாண்டியனும் அவரது மகனும் வழக்கறிஞர்கள். ஜெயலலிதாவையே சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்க வைத்தவர்கள். அதனால் அவர்கள் அப்படித்தான் ரூல்ஸ் பேசுவார்கள்.
சசிகலா பொறுப்பு பொதுச்செயலராக இருப்பதால் இப்போது கட்சி நியமனங்களை செய்கிறார். கட்சியின், நிரந்தர பொதுச்செயலராக தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரிடமும் வாக்களிப்பு பெறப்படும். அதிமுக சட்டங்களை உருவாக்கிய குழுவில் பி.எச்.பாண்டியன் இருந்தது உண்மைதான். ஆனால் எம்.ஜி.ஆர் ஏன் அப்படி ஒரு ரூல்ஸ் உருவாக்கினார் என்பது எம்.ஜி.ஆருடன் இருந்த எனக்குத்தான் தெரியும் என்றார்.