இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஒரு சிறப்பு ரயிலை இயக்க தீர்மானித்துள்ளது தெற்கு ரயில்வே! கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசுகள் விதித்துள்ள ஊரடங்கினால் மேற்கொண்டு பிழைக்க வழி இன்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் தெற்கு ரயில்வேயும் இணைந்து திருநெல்வேலியிலிருந்து பீகார் மாநிலத்தில் உள்ள பேட்டியா என்ற ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
திருநெல்வேலியிலிருந்து செவ்வாய்க்கிழமை (12.5.2020) இரவு 10 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், வெள்ளிக்கிழமை (15.5.2020) அதிகாலை 05.30க்கு பேட்டியா ரயில்நிலையம் சென்று சேருகிறது. இந்த ரயிலில் 1332 இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பயணிக்கின்றனர்.
அனைத்து ரயில் பெட்டிகளும் கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும், பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு முன்பாக முழுமையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு, பிறகே அனுமதிக்கப்பட்டனர் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
மேலும், ரயிலில் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது போன்ற சிறப்பு ரயில்கள் வட மாநிலங்களில் அண்மையில் இயக்கப்பட்டன.