வாரம் இருமுறை இயங்கும் அதிவேக சிறப்பு ரயில், மதுரை- எழும்பூர் இடையே ஏப்ரல் 18 முதல் இயக்கப்படுகிறது.
தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. எனினும், முன்பதிவு இல்லாத டிக்கெட் பயணத்திற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அட்வான்ஸ் புக்கிங் செய்த பயணிகள் மட்டுமே இதுவரையில் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
தற்போது தேர்தல் நடைமுறையோடு, கோடை காலமும் தொடங்கி விட்டதால் தென் மாவட்டத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் வாரம் இருமுறை இயங்கும் அதிவேக சிறப்பு ரயில் மதுரை- சென்னை எழும்பூர் இடையே அடுத்த மாதம் ஏப்ரல் 18 முதல் இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
எழும்பூரில் இருந்து இரவு 10.05 மணிக்கு புறப்படும் இந்த சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், காலை 8.10 மணிக்கு மதுரை சென்றடைகிறது. அதேபோல், மதுரையில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 6.55 மணிக்கு வந்து சேருகிறது.
இந்த அதிவேக ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரையை சென்றடைகிறது. .