கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை என்று ஆய்வில் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நேரலகிரி கிராமத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்துள்ளதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உத்தரவின் பேரில், மேலசின்னப்பள்ளி( M C பள்ளி) பகுதியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான கே.வி.கே என்றழைக்கப்படும் பூச்சிகள் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் சுந்தர் ராஜன் தலைமையில், வேளாண் துறை இணை இயக்குனர் ராஜசேகர் மற்றும் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மோகன்ராஜ் குழுவினர் வெட்டுக்கிளிகள் உள்ள பகுதிக்கு நேரில் சென்று இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் தற்பொழுது வந்துள்ள வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக் கிளிகள் இல்லை எனவும் கள்ளிச் செடிகளில் வந்து அமரும் வெட்டுக்கிளிகள் என்றும் இது பருவநிலை மாற்றம் காரணமாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவைகளை தடுக்கும் பொருட்டு அதற்கு உரிய பூச்சி மருந்துகளை தெளிக்க அந்த பகுதியில் பொதுமக்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். இதன் காரணமாக பொதுமக்கள் எந்தவித அச்சமும் பீதியும் கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.