மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்கியும் பயனில்லை, நூல் விலை உயர்வுக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரி, மத்திய அமைச்சரிடம் கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் மனு அளித்தார்.
கோவைக்கு வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, கரூர் மாவட்ட பாஜக சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் கரூர் மாவட்ட பாஜக., தலைவர் செந்தில்நாதன். அப்போது அவர் ஒரு கோரிக்கை மனுவையும் அளித்தார். அதில்,
கரூர் மாவட்ட அளவில் மிகவும் பிரதானமான ஜவுளித்தொழிலுக்கு தேவையான நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. ஆகவே மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்கியது. ஆனால், கரூரில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் நுால்களின் விலை, 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
குறைந்தது மூன்று மாதங்களுக்கு, நுால் விலை ஒரே சீராக இருக்க வேண்டும், கரூரில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், 8,000 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்து, 4,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. ஆனால், கடந்த சில மாதங்களாக, நுால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும், ஆகவே, இத்தொழிலை நம்பி கரூர் மாவட்ட அளவில் மட்டுமில்லாமல், கரூர் மாவட்டத்திற்கு வந்து பணியாற்றி வரும் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர். எனவே மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஜவுளித்தொழிலில் தொழில் துறை சந்திக்கும் சவால்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் விளக்கினார். அதை பொறுமையுடம் கேட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கரூர் ஜவுளித்தொழில் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தொழில் மேம்பாட்டுக்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆர்வமுடன் விசாரித்தார். இந்த சந்திப்பிற்கு உறுதுணையாக இருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் கரூர் மாவட்ட மக்கள் சார்பிலும், கரூர் மாவட்ட பாஜக சார்பிலும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.