பொருளாதார ரீதியாக பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு பத்து சத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் இந்த மாதம் முதல் அமலாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக., வழக்கு தொடுத்தது.
இந்நிலையில், திமுக., தலைமையின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிர்வாகிகள் சிலர் திமுக., அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தாமாக விலகி வருகின்றனர்.
தென்காசி பகுதி, இலஞ்சியைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு திமுக., பொதுச் செயலர் அன்பழகனுக்கு எழுதிய கடிதம் இப்போது சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. மு.கருணாநிதி சொன்னது போல, நெல்லை எமக்குத் தொல்லை என்றபடி, நெல்லை மாவட்டத்தில் இருந்தே திமுக.,வுக்கு எதிரான இந்தக் குரல் எழுந்துள்ளது. இது போன்று பல இடங்களில் திமுக.,வினர் தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்து அவற்றை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
ரெ.ஆறுமுகம் என்பவர் எழுதியுள்ள பேஸ்புக் பதிவு மற்றும் கடிதம்…
இன்று முதல் நான் வகித்து வந்த தென்காசி ஒன்றிய திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் என்கிற பொறுப்பில் இருந்தும் திமு கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நான் விலகிக் கொண்டேன் என்பதை மிக மனவேதனையுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன் மேலும் இனிமேல் நண்பர்கள் யாரும் கட்சி ரீதியாக எனை அணுகாமல் தொழில் மற்றும் நட்பு ரீதியில் அணுகி கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அனுப்புனர் ஆறுமுகம் தந்தையார் பெயர் ரங்கநாதன் பிள்ளை தென்காசி ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் என்று குறிப்பிட்டு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் இவர் கடிதம் எழுதியுள்ளார் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது
நான் இந்து சைவ வேளாளர் என்ற முற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன். நான் எனது 18 வயதில் இருந்து திமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் தென்காசி ஒன்றிய செயலாளரான திரு ராமையா என்ற துரை அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் அவர்கள் பரிந்துரையின் பெயரில் நான் மேற்கண்ட பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளேன்.
சில நாட்களுக்கு முன்புவரை கலைஞரின் புகழைப் பரப்புவதிலும் திமுகவின் செயல்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு வரும் பணியை இணையதளத்திலும் சிறப்பாக செய்து வந்தேன். எனது தந்தையும் திமுக ஆரம்பித்த நாளிலிருந்து கட்சியின் தீவிர தொண்டராக இருந்து கட்சியை வளர்த்தவர்
எங்கள் பேரூர் கழகத்தின் அவைத்தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவர் ஆனால் இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மேன்மைமிகு இந்திய ஜனாதிபதி ஒப்புதல் அளித்து சட்டம் ஆகிவிட்ட முற்பட்ட சாதியினர் ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருப்பதை அறிந்து மிகவும் மனவேதனையுடன் எங்கள் சமூகம் சாதிய இட ஒதுக்கீட்டினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிவிட்டது இங்கு திமுக தலைவர் அல்லது உடனிருப்பவர்களும் அறியாதவர்கள் அல்ல
ஆனால் பதவி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இதன் மூலம் மற்ற சாதியினரின் அனுதாபத்தை பெற்று வாக்குகளை அள்ளி விடலாம் என்று தவறான எண்ணத்தில் கணக்குப்போட்டு வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன் எனவே எனது மனசாட்சிக்கு உட்பட்டு நானும் சாதிய இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையிலும் நமது கழகத்தில் தொடர்ந்து பணியாற்ற இயலாத மன நிலையில் நான் இருப்பதாலும் கழக தொண்டர் மற்றும் கழகம் எனக்கு அளித்த மேலே குறிப்பிட்ட பொறுப்பில் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன் என்பதை மிக மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி … என்று குறிப்பிட்டுள்ளார் ஆறுமுகம்.
இந்நிலையில், திமுக., தலைவர் ஸ்டாலினின் இந்து விரோத திருமணச் சடங்கை இழிவு படுத்திய பேச்சுக்காக, உண்மை இந்து உணர்வுடன் இருக்கும் திமுக.,வினர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்குரல்கள் எழுந்துள்ளன.
இதே போல இஸ்லாமிய திருமண நிகழ்ச்சிக்கு சென்று, இந்துக்கள் வேள்வி வளர்த்து பாரம்பரியமாக நடத்தும் திருமணங்களை இழிவுபடுத்தி பேசிய ஸ்டாலினின் இந்து விரோத போக்கைக் கண்டித்து இதே போல மானம், ரோஷம், சூடு, சொரணை இருக்கிற திமுக பொறுப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்…என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள் பலர்.