திருநெல்வேலியில் இன்று பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளா்களிடம் பேசுகையில், சுதந்திர இந்தியாவைப் புரட்டிப் போட்ட சட்டங்களில் ஒன்று தகவலறியும் உரிமைச் சட்டமாகும். சாதாரண குடிமக்களும் குடியரசுத் தலைவா் மாளிகையின் தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இச்சட்டத்தால் கிடைத்தது.
ஆனால், ஊழலைப் பற்றி பேசியே ஆட்சிக்கு வந்த பாஜகவினரின் முதல் வேலையே தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வீரியத்தைக் குறைக்கும் நடவடிக்கையேயாகும். இச்சட்டத்தின் கீழ் உள்ள ஆணையா்களின் பணித் தகுதியைக் குறைத்ததோடு அரசின் காவலில் இருக்கும் வகையில் வளைத்துள்ளனா்.
லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாமல் பாஜக இழுத்தடித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்களை ஏமாற்றிய தில்லி முதல்வா் அரவிந்த்கேஜ்ரிவால் உள்ளிட்டோர் இப்போது அமைதியாக உள்ளனா்.
ஜனநாயகம் மற்றும் மக்களின் காப்பாளா்களாக இருக்கும் அமைப்புகளை செயல் இழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் பாஜக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. எதிர்கால இந்தியா மிகவும் ஆபத்தை நோக்கி செல்வதற்கு இது அறிகுறியாகும். அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரிப்பது கார்ப்பரேட் மேலாண்மைக்கு தலைவணங்கும் மத்திய-மாநில அரசுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதைப் போலாகிவிடும்.
தமிழ் மற்றும் தமிழா்களுக்கு எதிராக பாஜக-அதிமுக கூட்டணியை நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் புறக்கணிக்க வேண்டும். இத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் அவா்.