உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட அதிமுக தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
தமிழகத்தில் நிர்வாக ரீதியாக உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடந்து வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இதில், கூட்டணிப் பேச்சுகளும் சூடுபடித்து வரும் நிலையில் கட்சிகளுக்கு இடையேயான மோதல் போக்கும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, இப்போது வெற்றிடம் என்ற பேச்சு அதிகரித்து வருகிறது. ரஜினி, கமல் என அனைவரும் வெற்றிடம் குறித்துப் பேசி வரும் நிலையில், வெற்றிடத்தை எடப்பாடி நிரப்பி விட்டாரென்று அதிமுக.,வினரும், ஸ்டாலின் நிரப்பி விட்டார் என்று திமுக.,வினரும் கூறி வருகின்றனர்.
அதிமுக., மீதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் வைக்கப் படும் விமர்சனங்களை எதிர்கொண்டு, கிண்டலடிப்பதும் பதில் சொல்வதுமே அமைச்சர் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரின் வேலையாக இருக்கிறது.
தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட அதிமுக தயார். அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் யாருக்கு பலம் என்ன என்பது தெரிந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.
ராஜேந்திர பாலாஜியின் பேச்சு, கூட்டணிக் கட்சியினருக்கே கூட கொஞ்சம் முகச்சுளிப்பைத் தந்திருக்கிறது என்றாலும், மேயர் பதவிகள், சேர்மன் பதவிகளை அதிமுக., குறிவைத்து இயங்கும் சூழலில், கூட்டணிக் கட்சியினர் வாயை அடைக்க இது போன்ற தத்துப் பித்துப் பேச்சுகள் உதவும் என்று அதிமுக., மேலிடம் கணக்குப் போட்டிருக்கிறதாம்!