குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட வாலிபரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தில்லியில் ஷாகீன்பாக்கில் 71 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. நேற்று மாலையில் தில்லி பஜன்பூரா பகுதியில் போலீசாருக்கும் , போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வாகனங்களுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது. போலீஸ் ஏட்டு உள்பட 5 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதனால் இங்கு பதட்டம் நிலவுகிறது. மேலும் வன்முறை பரவாமல் தடுக்க கூடுதல் போலீசார் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் இளைஞர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் போலீசாரை சுட்டு மிரட்டி விரட்டினார். வானத்தை நோக்கி 5 ரவுண்ட்டுகள் சுட்டார். இந்த வீடியோ சமூகவலை தளங்களில் பரவியது. இவர் யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து தேடி வந்தனர். இந்நிலையில் ஷாரூக் என்ற நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
33 வயது கொண்ட தாடி வைத்து காணப்படும் இந்த நபருக்கு துப்பாக்கி எப்படி வந்தது ? இவருக்கு பயங்கரவாத அமைப்புகளிடம் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தில்லி வன்முறைக்கு தேச விரோத சக்திகள் தான் காரணம் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவ்பெயர் ஏற்படுத்த நடக்கும் முயற்சி இதுவாகும். கலவரத்தை தூண்டுபவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.