சென்னை தேனாம்பேட்டை பார்க் ஓட்டல் அருகே நடந்து சென்ற ஒருவரிடம் பைக்கில் வந்த இருவர் செல்போனை பறித்து கொண்டு சென்றுள்ளனர். அவர்களை அங்கிருந்தவர்கள் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் வேகமாக சென்றுவிட்டனர்.
அப்போது அங்கு அவ்வழியாக வந்த கார் ஓட்டுநர், காரை கொண்டுபோய் திருடர்கள் பைக்கின் முன்பு வேகமாக நிறுத்த நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். இருப்பினும் அவர்களில் ஒருவரை மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது.
இதை தொடர்ந்து பிடிபட்ட நபரை அப்பகுதிவாசிகள் அடித்து, காவல்துறையில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. திருவொற்றியூர் முதல் தேனாம்பேட்டை வரை 3 மணிநேரத்தில் 18 செல்போன்களை வழிப்பறி செய்துள்ளனர்.
இந்த செல்போன்களை குறைந்த விலைக்கு விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக இவர்கள் இந்த திருட்டு தொழிலுக்கு விலையுயர்ந்த பைக்குகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து பிடிபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடியவரைத் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான பாலாஜி 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் பறிப்பில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.