இரட்டை இலை எங்கு உள்ளதோ அங்குதான் நாங்களும் இருப்போம் என்று கூறினார் கலைச்செல்வன் எம்.எல்.ஏ.,
அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, ரத்தினசபாபதி, நாங்கள் ஆட்சிக்கு எதிராக செயல்படவில்லை என்றார்.
அவர் மேலும் கூறியபோது, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் இருப்பதால் நோட்டீஸை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தோம். தர்மம், நீதி வென்றது என்று சொல்லக் கூடிய வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு உறுதுணையாகத்தான் இருந்திருக்கிறோமே தவிர, கட்சிக்கோ, ஆட்சிக்கோ எதிராக எந்த செயலிலும் ஈடுபடவில்லை. எங்கள் மீது இந்த ஆட்சிக்கும், சபாநாயகருக்கும் உள்நோக்கம் இருந்தது. முதல்வர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முறியடித்தவர்கள் நாங்கள்.
இந்த ஆட்சிக்கு எதிராகவோ, கட்சிக்கு எதிராகவோ நாங்கள் எந்த சூழ்ச்சியும் செய்யவில்லை. ஆனால், ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு இவர்கள் பதவி கொடுத்தனர்” என்று குற்றம் சாட்டினார்.
கலைச்செல்வன் எம்.எல்.ஏ. பேசிய போது, இரட்டை இலை சின்னம் எங்கு உள்ளதோ அங்குதான் நாங்களும் இருப்போம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.