கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது.இங்கே, கடந்த ஆண்டு ஜூலையில், தொடர் மழை பெய்ததில், பல பகுதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில், விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கான தொகை, 113.69 கோடி ரூபாயை வழங்குமாறு கேட்டு, மாநில அரசுக்கு, விமானப் படை, பில் அனுப்பி உள்ளது.இதையடுத்து, இந்த தொகையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, பிரதமர் மோடிக்கு, முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கேரளாவில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய, 31 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என, ஐ.நா.,சபையின், பேரழிவு மதிப்பீட்டு குழு தெரிவித்து உள்ளது.வெள்ள நிவாரணமாக, கேரளாவுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 2,904 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கேரளா, 2017ல், ‘ஒக்கி’ புயலாலும், 2018ல், வெள்ளத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது.இதனால், மாநிலம், பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.
இதனால் தான், ‘கேரள மறுசீரமைப்பு நடவடிக்கை’யை அரசு துவங்கியுள்ளது. இதற்கே, அரசுக்கு, பெரும் நிதி தேவைப்படுகிறது. அதனால், மீட்பு பணிகளுக்காக, விமானப்படை கேட்டுள்ள, 113.69 கோடி ரூபாயை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, பினராயி விஜயன் அதில் குறிப்பிட்டுள்ளார்.