கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது என்ற அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டு வருகின்றன. ஆனால் சமூக இடைவெளி என்பதையோ, பிறர் அருகே இடித்துக் கொண்டும் உரசிக் கொண்டும் நிற்கும் நேரம் இது அல்ல என்பதையோ மக்கள் இன்னமும் உணர்ந்தபாடில்லை.
மக்கள் அதிகம் கூடக்கூடாது, ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு, உரசியபடியோ வெகு அருகிலோ நின்று கொண்டிருந்தால் இந்த வைரஸ் எளிதில் அடுத்தவருக்கு தொற்றிக் கொள்ளும். எனவேதான், சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும், தற்காத்துக் கொள்ளவும் வீடுகளில் தனித்திருங்கள், வெளியில் வரவேண்டாம் என்றும் அரசு சுகாதாரத் துறை வலியுறுத்து கிறது.
ஆனால் இது எதற்காக என்பதையே உணராதவர்கள் போல், மக்கள் கூட்டம் கூட்டமாக கிடைக்கும் சிறிது நேரத்தை பயன்படுத்திக் கொள்ள முண்டியடிப்பது, சுகாதாரத் துறையின் நோக்கத்தையே சிதறடிப்பதாக அமைந்திருக்கிறது.
மக்கள் கூட்டத்தை சேர்க்கக் கூடாது என்பதற்காகத்தான் ஆலய வழிபாட்டில் தடை ஏற்படுத்தப்பட்டது. அதாவது ஒழுங்குமுறையுடன் கூடும் கூட்டம்தான்! ஆனால் ஆலயத்துக்கு வெளியே இடைவெளியின்றிக் கூடும் ஒழுங்குமுறையற்ற கூட்டத்தைப் பார்த்தால்… மயிலை அறுபத்து மூவர் உற்சவத்தையே நடத்திவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.
தமிழகத்தில் உள்ள 5 மாநகராட்சிகளில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், இன்று சந்தைகளில், காய்கறிக் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதன் காரணமாக மக்கள் 4 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க வேண்டும் என்பதால், சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் இன்று பிற்பகல் 3 வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டறியப் படாத காரணத்தால், உலகமே இந்த நோய்த் தொற்று வராமல் தனித்திருத்தலே சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றது. தற்போதைய சூழலில், மக்கள் சமூக விலகலை பின்பற்றுவதே ஒரே தீர்வு என்று, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
முழு ஊரடங்கு அறிவிப்பை அடுத்து கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் காய்கறிகள் வாங்க மக்கள் பெருமளவில் குவிந்தனர். மக்கள் இப்படி குவியக் கூடாது என்பதற்காகத்தான், தமிழகத்தில் அத்யாவசிய பொருட்கள் மக்களுக்கு சென்றடைய மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே தற்காலிக மார்க்கெட்டுகளும் ஏற்படுத்தப்பட்டன.
இருப்பினும், நாளை முதல் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், 4 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க வேண்டும் என்ற ஆவலில் பெருமளவில் மக்கள் குவிந்தனர். அதே நேரத்தில் சமூக விலகலை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தனர்.