இன்று குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்கித் தருவது நம்மிடையே பொதுவாகக் காணப்படும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
கொஞ்சம் வசதிப் படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விலை கூடுதலான எலக்ரானிக்ஸ் பொம்மைகளை வாங்கித் தருகிறார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு சொப்பு சாமான் என்பதை வாங்கித் தருவார்கள்.
இது மரத்தில் கடைசல் மூலம் தயாரிக்கப்படும் விளையாட்டு சாமான்கள் ஆகும். வீட்டு உபயோகப் பொருள்களான அடுப்பு பானை, சட்டி, கரண்டி அம்மி, ஆட்டுரல் போன்றவற்றை சிறிய வடிவத்தில் மரத்தைக் கடைந்து உருவாக்கி இருப்பார்கள். இந்த விளையாட்டு பொம்மைகளில் கண்ணை கவரும் விதத்தில் வண்ணங்களும் பூசப்பட்டிருக்கும். இந்தப் பொம்மைகள் பார்ப்பத்றகு மிகவும் அழகாய் இருக்கும். இவற்றை அழகிய, சிறிய ஓலைப் பெட்டியில் அடைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் அழகே அழகு. ஒரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இந்த கடைசல் பொம்மை தயாரிப்பில் நிறைய பேர் ஈடுபட்டு நிறைய பொம்மைகள் தயாரிக்கப்பட்டது உண்டு.
அந்தக் காலத்தில் முக்கிய குடிசைத் தொழிலாக அந்தப் பகுதியில் விளங்கியது. அந்தக் காலத்தில் சொப்பு சாமன்கள் வைத்து பிள்ளைகள் விளயாடும் விளையாட்டு அவர்கள் வாழ்க்கையை விளையாட்டுப் போக்கில் புரிந்து கொள்ளக் கூடிய பயிற்சிக் களமாகவும் இருந்தது.
ஆனால் இன்று நாகரிக வளர்ச்சியின் காராணமாக பிள்ளைகள் விளையாட ‘பிளாஸ்டிக்’ பொம்மைகளை வாங்கி தரும் வழக்கம் கூடிவிட்டது. பிள்ளைகள் இந்த பொம்மைகளை வைத்து விளையாடும் போது வாயில் வைத்து கடிக்கக் கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொம்மைகளில் கவர்ச்சிக்கும் அழகுக்கும் பூசப்படும் வண்ணங்களில் கலந்திருக்கும் நச்சு ரசாயன பொருட்கள் குழந்தையின் வயிற்றினுள் சென்று உயிர் ஆபத்தை விளைவிக்கும் அபாயம் இருக்கிறது. இந்த அபாயம் பெரும்பாலும் நம்மால் உணரப்படுவதில்லை.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பலர் வேலையிழந்து தவித்து வரும் நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமட்டுமின்றி தம்மோடு சேர்ந்த சக தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைக்க வழி செய்து கொடுத்துள்ளார். தச்சுத் தொழிலாளி ஒருவர்.
வாழ்வாதாரத்தை இழந்து பலரையும் தவிக்க வைத்துள்ளது கொரோனா. இந்த காலகட்டத்தில் செய்வதறியாது தவித்து வரும் பலருக்கு மத்தியில் மலையில் புதுமையை புகுத்தி அசத்தி வருகிறார். திண்டுக்கல் இளைஞர் துரைமுருகன்.
வெறும் விளையாட்டாக மட்டுமின்றி சிறு குழந்தைகளின் கணித அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் இவரது கலைப் பொருட்கள் இருப்பது சிறப்பு. மேட்டுப்பட்டியில் தனது தந்தையின் பிளைவுட் கடையில் போதிய வருமானம் இல்லாததால் மரத்தினாலான பொம்மைகளை செய்து குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்து வந்துள்ளார் துரைமுருகன்.
பின்னர் அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே மெமரி செஸ், கணித வாய்ப்பாடு என குழந்தைகளுக்குப் பயனுள்ள விளையாட்டுத் சாதனங்களை வடிவமைக்க தொடங்கினார்.
தற்போது பல தச்சு தொழிலாளர்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளார். நண்பர்களின் ஆலோசனைபடி கலைப்பொருட்களை அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பதிவிட்டார்.
தற்போது உலகளாவிய சந்தையில் இவரது பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சீனாவின் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மரத்தினால் செய்யப்பட்ட புதுமையான வடிவமைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பும் இவர்களது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.