மிகச் சிறப்பாக பணியாற்றிய, இலகு ரக போர் விமானப் பிரிவின் விமானி, விங் கமாண்டர் வருண் சிங்குக்கு குடியரசுத் தலைவரின் ஷெளரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
விமானப்படையின் இலக ரக போர் விமானப்பிரிவின் விமானி விங் கமாண்டர் வருண் சிங். பணிமனைக்கு சென்று திரும்பிய இலகு ரக போர் விமானத்தில், அனைத்து கருவிகளும் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதை பரிசோதனை செய்து பார்ப்பதற்காக, இவர் கடந்த 2020 அக்டோபர் 12ம் தேதி, அந்த விமானத்தில் பறந்தார்.
அதிக உயரத்தில் விமானத்தில் பறந்தபோது, விமானி அறையின் காற்றழுத்த கருவி பழுதடைந்தது. இதை சரியாக கண்டுபிடித்த விங் கமாண்டர் வருண் சிங், விமானத்தை கீழே இறக்கினார். கீழே இறங்கும்போது, விமான கட்டுப்பாட்டு கருவியும் செயல் இழந்தது.
இதனால் போர் விமானம் முழு கட்டுப்பாட்டையும் இழக்கும் நிலை ஏற்பட்டது. இது போன்ற சூழல், போர் விமானத்தில் ஒரு போதும் ஏற்பட்டதில்லை. விமானம் தாறு, மாறாக பறந்தது. மிகுந்த உடல் மற்றும் மன அழுத்த சூழ்நிலையிலும், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும், தனது அனுபவத்தால், விமானத்தை கட்டுப்பாட்டுடன் விங் கமாண்டர் வருண் சிங் இயக்கினார்.
10,000 அடி உயரத்தில் பறந்தபோது, விமானம் முழு கட்டுப்பாட்டையும் இழந்தது. இது போன்ற சூழ்நிலையில், விமானி, விமானத்தை விட்டு வெளியேறும் சுதந்திரம் உள்ளது.
ஆனால் தனது உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்ட போதிலும், அவர் தனது தைரியம் மற்றும் திறமையால் போர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இலகு ரக போர் விமானத்தில் ஏற்படும் தவறை துல்லியாக ஆய்வு செய்யவும், இது போன்ற தவறுகள் இலகு ரக போர் விமானத்தில் நடைபெறுவதை தடுக்கவும், இச்சம்பவம் காரணமாக இருந்தது.
விங் கமாண்டர் வருண் சிங்கின் உயர்ந்த தொழில் முறை, நிதானம், விரைவாக முடிவெடுத்தல் ஆகியவை காரணமாக, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும், அவர் விமான இழப்பு, பொதுச் சொத்து மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் உயிரிழப்பை தவிர்த்து, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
இந்த விதிவிலக்கான வீரதீர செயலுக்காக, விங் கமாண்டர் வருண் சிங்குக்கு ஷெளரியா சக்ரா விருது வழங்கப்படுகிறது.