ரயிலில் பயணம் செய்வோர் 1323 என்ற பிரத்யேக அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டால், அவர்களின் இருக்கையைத் தேடி உணவு வரும் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐஆர்சிடிசி. அதிகாரிகள் கூறியதாவது; “இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி.) www.irctc.co.in என்ற இணையதளத்தில் தினமும் லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்து ரயில்களில் பயணிக்கின்றனர்.
பயணிகளின் வசதிக்காக பெட்ஷீட், தலையணை, உணவு உள்ளிட்ட வசதிகளை ஐஆர்சிடிசி படிப்படியாக துவங்கியது. இந்த வசதிகளை செல்போன் செயலி, டோல் ஃப்ரீ எண் மூலம் பயணிகள் பெற்று வருகின்றனர்.
தற்போது, ரயில் பயணத்தின்போது இருக்கையைத் தேடி உணவு பெறுவதற்காக 1323 என்ற இலவச அழைப்பு எண்ணை ஐஆர்சிடிசி பிரத்யேகமாக அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம் ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் இந்த வசதி வாயிலாக உணவுகளைப் பெறலாம்” என்றனர்.