12 -18 வயதினருக்கான கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்கெனவே கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், பயாலஜிக்கல் – இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு, மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரிக்கும் இந்த தடுப்பூசிக்கு, கொரோனா சுரக்ஷா திட்டத்தின் கீழ் இதற்கு நிதியுதவி அளித்து வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம், தடுப்பூசியின் 3ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு டிசிஜிஐ ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத்ம் சோதனை அடிப்படையில் அவசர காலப் பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்தார்.
இந்நிலையில், கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு, மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று (பிப்ரவரி 21) ஒப்புதல் அளித்துள்ளது. 12 -18 வயதினருக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
முன்னதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசிக்குக் கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. இது 15 முதல் 18 வயது வரையான டீனேஜ் இளைஞர்களுக்கு மட்டும் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 12 -18 வயதினருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதுகுறித்து பயாலஜிக்கல்-இ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இடைக்கால முடிவுகளின் அடிப்படையில் (இரண்டாவது மற்றும் மூன்றாவதுகட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு) இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை பொறுத்தவரையில், முதல் டோஸ் போட்டு 28 நாட்களுக்குப் பின் இரண்டாவது டோஸ் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா மாத்திரைக்கு அமெரிக்காவின் எப்டிஏ ஒப்புதல் வழங்கியது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி தருமாறு, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவின் 23-வது கூட்டத்தில் பரிந்துரைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.