அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தில் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள் கண்காட்சியில் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது என அறிவியல் மைய அலுவலர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள் என்னும் தலைப்பில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று ( 22) முதல் கண்காட்சி தொடங்குகிறது. இந்தக் கண்காட்சி 28ஆம் தேதிவரை நடக்கிறது.
இதனை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிடலாம் என மாவட்ட அறிவியல் மைய அலுவலர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், “மாவட்ட அறிவியல் மையம் சார்பில் வரும் 22ஆம் தேதிமுதல் 28ஆம் தேதிவரை சுதந்திர இந்தியாவின் 75ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் ஒருவார கால கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இத்தோடு இணைந்து அறிவியல் மைய 35ஆவது ஆண்டுவிழா தேசிய அறிவியல் தினம் என முப்பெரும் விழாவாக நடத்தப்படுகிறது.
இதன் முக்கிய நிகழ்வாக நாட்டின் அறிவியல் தொழில்நுட்பப் பாரம்பரியம், சுதந்திர இந்தியாவின் அறிவியல் கொள்கைகளும், அவற்றின் தாக்கமும், பசுமை, வெண்மை, நீலப்புரட்சிகள், நீர்வழித் திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தி என்பது உள்பட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தில் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள் கண்காட்சியில் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.
மேலும், கண்காட்சி நடக்கும் ஒருவார காலம் அறிவியல் நிகழ்வுகள், போட்டிகள், சிறப்புக் கருத்தரங்குகளும் நடக்கின்றன. 28ஆம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை மாணவர்கள் பொதுமக்கள் பார்வையிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.