கரூரிலுள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சாமி கும்பிடுவதுபோல் நடித்து, தங்கப்பொட்டுகளைத் திருடி சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பான சிசிடிவி காட்சியை கோயில் நிர்வாகம் வெளியிட, அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரகாரத்தை சுற்றி வரும் மர்ம நபர்
கரூர் மாநகரில், கரூர் டு வாங்கல் சாலையில் இருக்கும் அரசுகாலனியில் பிரசித்திபெற்ற மகாபுற்றுக்கண் மாரியம்மன் நவகிரக ஸ்தலம் உள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்த ஸ்தலத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு காலை 09.15 மணி அளவில், சாமி கும்பிடுவதை போன்று நடித்து திருடன் ஒருவன் கோயிலுக்குள் நுழைந்து, அம்மன் விக்ரகத்தின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு தங்க பொட்டுகளை திருடிச்சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இரண்டு சக்கர வாகனத்தில் பேக் அணிந்தபடி வந்த அந்த மர்ம நபர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை. இந்த திருட்டு சம்பவம் கோயில் வளாகம், கோயிலின் வெளிப்புரம் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களில் சிக்கியுள்ளது.
வெங்கமேடு காவல் நிலையம்
இந்த வீடியோவை கோவில் நிர்வாகி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
அதோடு, இந்த திருட்டு சம்பவம் குறித்து கோயில் தரப்பில் இருந்து வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், சாமி கும்பிடுவது போல் நடித்து, அம்மன் தங்கப்பொட்டுகளை திருடிச் சென்ற சம்பவம், அந்த கோயில் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.