தென்காசியில் காணாமல் போன மாணவரை, இன்ஸ்டாகிராம் உதவியுடன் தில்லி சென்று மீட்டு வந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரது மகன் புவனேஷ், அப்பகுதியில் உள்ள ஐடிஐ நிறுவனத்தில் படித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் பெற்றோர்கள் திட்டியதால் கோபமடைந்த புவனேஷ் வீட்டை விட்டு வெளியேறிவுள்ளார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தென்காசி போலீசார், மாணவரை தேடி வந்தனர்.
மேலும் மாணவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, மாணவர் இமாச்சலப் பிரதேசம் மணலிக்கு சென்றிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து கண்காணித்த போலீசார், அவர் தில்லியில் இருப்பதை உறுதிசெய்து, அங்கு விரைந்தனர். தில்லி போலீசாரின் உதவியுடன் மாணவரை கண்டுபிடித்து தென்காசிக்கு அழைத்து வந்து அறிவுரைகள் வழங்கி, பெற்றோருடன் சேர்த்து வைத்தனர்.
இதனையடுத்து சிறப்பாக செயல்பட்ட தென்காசி காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.