டாக்டர்கள் என்னை கீழே படுக்க வைத்து மூச்சுவிட சொல்கிறார்கள். என்னால் முடியவில்லை என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா கடந்த 6 மாதங்களாக சத்சங்கம் ஏதும் நடத்தவில்லை. இதனால் நித்தியானந்தா கைலாசா தீவில் இறந்துவிட்டார் என்று கூறி சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டாத குறையாக ஒரு தகவலை பரப்பினர்.
இந்த நிலையில் நித்தியானந்தா நான் சாகவில்லை , உயிருடன் இருக்கிறேன். சமாதி நிலையில் இருக்கிறேன் என்று கூறியதுடன் திரும்பி வந்துட்டேனு சொல்லு என எழுதி காட்டியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் தனது உடல்நிலை குறித்து பக்தர்களுக்கு நித்தியானந்தா புதியதொரு பேஸ்புக் பதிவை போட்டிருந்தார்.
அதில் தனது உடல் உறுப்புகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. 6 மாதங்களாக ஆகாரம் உட்கொள்ளாததால் வலு குறைந்துள்ளது.
எல்லா மருத்துவ ரிப்போர்ட்களும் நன்றாக இருந்தாலும் உணவை வாயில் போட்டவுடன் வாந்தி வருகிறது.
6 மாதங்களாக தூக்கம் வேறு இல்லை. எனவே பக்த கோடிகள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். நான் பத்மாசனத்தில் அமர்ந்தால் எல்லா நாடிகளும் சுவாசமும் அடங்கியிருக்கும்.
தற்போது நிர்வி கல்ப சமாதி நிலையில் எனது மனம் அமைதியாக இருக்கும். எனது மனம் இந்த உலகை மறந்துவிட்டது. என்னால் ஆழ்ந்து மூச்சுவிடமுடியவில்லை.
ஆனால் மருத்துவர்கள் என்னை கீழே படுக்க வைத்து மூச்சு விடுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். தூக்கம், உணவு இல்லாமல் உடல் நிர்வி கல்ப சமாதிக்கு பழக்கமாகிவிட்டது.
கிரகங்களும் கோள்களும் எனக்கு சாதகமாகவே உள்ளன. கைலாசாவில் மிகப் பெரிய மருத்துவமனை எல்லாம் இல்லை.
ஆனால் மிகப் பெரிய மருத்துவ கட்டமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதற்காக பக்தர்கள் யாரும் எனக்கு பணம் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.