நல்லோர் – 1
செய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர்செய்
தீமையை மறந்த பேரும்,
திரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேற்
சித்தம்வை யாத பேரும்,
கைகண் டெடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்
கையிற்கொ டுத்த பேரும்,
காசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி
காத்தருள்செய் கின்ற பேரும்,
பொய்யொன்று நிதிகோடி வரினும் வழக்கழிவு
புகலாத நிலைகொள் பேரும்.
புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்
பொய்ம்மையுரை யாத பேரும்,
ஐயஇங் கிவரெலாம் சற்புருட ரென்றுலகர்
அகமகிழ்வர்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
அருமை தேவனே!,
(ஒருவர்) செய்த உதவியை மறவாதவரும்,
ஒருவர் செய்த கெடுதியை மறந்தவர்களும், பொருளைக் கொடுக்கவந்தாலும் பிறர் மனைவியின்பால் மனத்தைச்
செலுத்தாதவர்களும், கையினாலே கண்டெடுத்த பொருளைப் பொருளுக்கு உரியவரிடம் கொண்டுபோய்க்
கொடுத்தவர்களும், உலகில் ஒருவர் செய்த அறம் கெடுதலுறாமற் காப்பாற்றுகின்றவரும், நிலையற்ற செல்வத்தைக் கோடிக்கணக்காக ஒருவர் கொடுத்தாலும் அழிவழக்குக் கூறாத
நிலையுடையவரும், உலகத்திலே தலைபோகும் என்றாலும் கனவிலேயும்
பொய் புகலாதவரும், இவ்வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகாகிய
நன்மக்கள் என்று உலகமாந்தர் மனம் களிப்பார்கள்.
செய்ந்நன்றி மறவாமை முதலானவை நன்மக்களின் பண்புகள்.