அரங்கன் உரைத்த அந்தரங்கம் – Part 3
????????????????????????????????????????????????
நமது மங்களங்களையெல்லாம் வளர்க்கும் மஹா தேவன் ரங்கநாதன். விபவம் எனும் நிலையில் அதாவது மத்ஸ்யம், கூர்மம் முதலிய அவதரங்களைச் செய்த நிலையில் அவனது நாட்யங்கள் விசித்ரமானவை. பக்தர்களான ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். தசாவதாரத்தில் நவரஸங்களையும் அளித்து ப்ரக்ருதி என்னும் அரங்கத்தில் பல அற்புத் திருவிளையாடல்களை அரங்கன் நிகழ்த்தியுள்ளான்.
ஆழ்வார்களும், ஆசார்யர்களும் தாமான தன்மை மறந்து தலைவி, தோழி, தாய் என பல நிலைகளில் அந்த அத்புத நாடகத்தை ரசித்துள்ளனர். அதேபோன்று அர்ச்சாவதாரத்தில் பல ஆச்சர்யங்கள் நிகழ்த்தியுள்ளான். பங்குனி உத்திரத்தில் பாஷ்யகாரருக்கு அருள்புரிந்தது. வேங்கடநாதனுக்கு “வேதாந்தாசார்யன்” எனும் பிருதம் அளித்தது. இவையெல்லாம் விட; கலியனின் வேண்டுகோளை ஏற்று ஆழ்வாரின் மறைத்தமிழுக்கு மேன்மையளித்தது மேலானதன்றோ. இதையடியொற்றிதானே அத்யயன உற்சவம்.
இப்போது ஏனோ விசித்ரமாக சில செய்கைகளை அரங்கன் செய்யும் போது அங்குள்ள எவருக்குமே அதன் பொருள் புரியவில்லை . மூன்று விரல்களை நிமிர்த்திக் காண்பித்தது என்ன? என அனைவருமே திகைக்கின்றனர்.
ஒருபுறம் பார்த்தால் ஆசார்யர்களைப் போன்று உபதேசமுத்திரையாகத் தெரிகிறது, மறுபுறம் பார்த்தால் ஏனைய விரல்களின் மடங்கியநிலை புரியவில்லை. மீனாய், ஆமையாய், கேழலாக இவன்பல அவதாரங்களைச் செய்திருந்தாலும் ஆசார்ய அவதாரத்தின் ஏற்றம் அதி விலக்ஷணமானது. ஹம்ஸ, மத்ஸ்ய, ஹயக்ரீவ, நர, நாராயண அவதாரங்கள் எடுத்திருந்தாலும் கீதாசார்யனாக அவன் உபதேசம் செய்தவையன்றோ உலகின் பாக்யம்.
“ஸாக்ஷாத் நாரயணன் தன்னிடமுள்ள அஸ்த்ரங்களான ஆயுதங்களை விடுத்து சாஸ்த்ரங்களைக் கைக்கொண்டு எடுக்கும் அவதாரம் ஆசார்யாவதாரம்” அஸ்த்ரங்களைவிட சாஸ்த்ரங்கள் வலிமையானவை என்றுணர்ந்த எம்பெருமான் சங்கல்பித்து தனது மூன்றுவிரல்களை அடையாளமாக மடித்துக் காண்பிக்கிறானோ!?
“அவனின் திருவுள்ளம்படிதான் ஆசார்யர்கள் அவதரித்துள்ளனரே. ஒருவேளை அர்சாவதாரத்தில் தனக்கு அப்படி ஒரு திருக்கோலம் ஸமர்ப்பிக்க வேண்டுமென்று நினைக்கிறானா?” ஒன்றும் புரியவில்லையே!
அரங்கா! இதென்ன சோதனை. உன் அடியார்களுக்கு என் செய் என்றிருக்கும் நீ இப்படி எங்களை தவிப்பில் ஆழ்த்தலாமா?
ராமானுசர் கேட்டவுடன் ஆவேசம் வந்தவன் போன்று அரங்கன் பேசினான். “ராமானுச! உங்களின் தவிப்பையே பேசுகிறாயே. அத்தவிப்பு எனக்கும் உண்டல்லவா”. இங்குள்ள ஒருவராவது எனது உள்ளக்குமுறலுக்கு மதிப்பளித்ததுண்டா? உங்களுக்கு என்னிடம் பக்தியுண்டு. மறுப்பதற்கில்லை. ஆனால் நான் உகந்த கைங்கர்யத்தைச் செய்ய வேண்டுமென்று எண்ணியதுண்டா?
அப்பப்பா! என்ன வேகம்! என்ன படபடப்பு. எம்பெருமான் உள்புகுந்து நியமித்தால் எல்லோருக்கும் ஆவேசம் வரும். இன்று அந்த எம்பெருமான் உள்ளே யார் புகுந்தனர்? எங்கிருந்து வந்தது இத்தனை ஆவேசம்?
நரசிங்கமதாக அவுணன் உடலைக்கூறாகக் கண்டபோது கூட இவ்வுலகம் இத்தகையதொரு ஆக்ரோஷத்தைக் கண்டதில்லையே.
“ப்ரபோ! தேவதேவ! ஸர்வேச்வரா! உனது திருவுள்ளம்தான் என்ன? அரங்கா! இனியும் அடியார்களை சோதிக்காதே! என்றார் ராமானுஜர். இனியும் அரங்கன் சோதிக்கமாட்டான். அவன் சோதிவாய் திறந்து பேசவாரம்பித்தான். மாயனின் வார்த்தையறிய நாமும் காத்திருக்கலாம்.
——- அரங்கன் பேசுவான்.
(காத்திருங்கள்… தொடரும்)
இப்படிக்கு,
ஶ்ரீAPN ஸ்வாமி.