கிரகண காலத்தில் ஒரு பண்டிதர் சமுத்திர ஸ்நானம் செய்வதற்காக கடற்கரைக்கு சென்றார். அவர் தம்மிடம் ஒரு செப்புப் பாத்திரத்தில் வைத்து இருந்தார். இந்தப் பாத்திரத்தை நான் கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றால் யாராவது இதனை திருடிக் கொண்டு போய் விடலாம். மாறாக நான் இதை கையோடு எடுத்துச் சென்றாலும் கை நழுவி கடலில் விழுந்து இதை அலை அடித்துக் கொண்டு சென்றுவிடலாம். நான் இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்தார்.
சிறிது நேரத்தில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. கடற்கரையில் சிறிய பள்ளத்தை தோண்டி அதில் பாத்திரத்தை வைத்தார் அதன் மேல் மணலைப் போட்டு மூடினார் அந்த இடத்தை பின்னர் அடையாளம் காண்பதற்காக அங்கே ஒரு லிங்கத்தை மணலால் செய்து விட்டு நிம்மதியாக குளிக்கச் சென்றார்.
கரையில் இருந்த சிலர் பண்டிதர் குளிக்கப் போவதற்கு முன்பு மணலைக் கொண்டு லிங்கத்தை செய்ததை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சமுத்திரத்தில் நீராடச் செல்லும் முன் இப்படித்தான் ஒவ்வொருவரும் லிங்கத்தை செய்து வைக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.
குளித்து முடித்தவுடன் பண்டிதர் தான் பாத்திரத்தை மறைத்து வைத்திருந்த இடத்திற்கு சென்று பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை தலை சுற்ற வைத்தது. ஏனெனில் ஒரு லிங்கம் அல்ல இரண்டு லிங்கம் அல்ல ஏராளமான லிங்கங்கள் அங்கே மணலால் செய்து வைக்கப் பட்டிருந்தன. அவற்றைப் பார்த்து குழம்பி போன பண்டிதர் இதற்குள் இங்கே எப்படி இத்தனை லிங்கங்கள் தோன்றின என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டே லிங்கத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று வருத்தப்பட்டார்.
தம்மால் முடிந்த அளவிற்கு அங்கிருந்த சில லிங்கங்களின் கீழே தேடிப் பார்த்தார் ஆனால் பாத்திரம் அவருக்கு கிடைக்கவேயில்லை. கடைசியில் வெறுங்கையுடன் வீடு திரும்பினார்.
யோசித்துப் பார்த்தால் மற்றவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே நடந்து கொள்ளும் பெரும்பாலான மக்களின் சுபாவத்தையே இந்த கதை எடுத்துரைக்கிறது. கண்மூடித்தனமாக பின்பற்றுதல் என்பது சரியானதல்ல. தவிரவும் தங்கள் மதிப்புக்குரிய ஒரு பெரியவர் செய்வதை பார்த்து தாங்களும் அதே போல் நடந்து கொள்ளும் சுபாவம் மக்களிடத்தில் இருப்பதால் ஆசிரியர்களும் சமயத் தலைவர்களும் பிறருக்கு நல்ல உதாரணமாக இருக்கும் படி நடந்து கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.