காவேரிப்பட்டணம் அருகே, பெண்ணை கொன்ற இளைஞரை, போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், காட்டுக்கொல்லை பூசாரி கொட்டகையை சேர்ந்த செல்வம் மனைவி துளசி, 55;
நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில், கால்நடைகளுக்கு தீவனம் சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்துவேல், 28, துளசியின் கழுத்து, கை, முகம் உள்பட பல இடங்களில், கத்தியால் வெட்டி விட்டு ஓட்டம் பிடித்தார்.
இதில் துளசி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். சொத்து தொடர்பாக, தன் பெற்றோரிடம் முத்துவேல் தகராறு செய்து வந்தார்.
கடந்த, 2018ல் சொத்தை பிரித்து தரக்கூறி, தாய் கவுரியை கொலை செய்தார். அந்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்தார்.
இந்நிலையில் சொத்தை, முத்துவேலின் தந்தை சரவணன், செல்வத்துக்கு விற்றதால், அவரது மனைவி துளசியை, வெட்டி கொன்றது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.