பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு ,கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியது.
இந்த இட ஒதுக்கீட்டுக்கான சொத்து மற்றும் வருமான சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து மற்றும் வருமானச் சான்றிதழ்கள் வழங்க வேண்டாம் என்று பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளதாகவும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்தில் வழங்கப்படும் சொத்து மற்றும் வருமானச் சான்றிதழ்களை பிற மாநிலங்களில் பயன்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்கள் தான் முடிவு செய்ய முடியும் எனவும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.