இந்து கடவுளரையும், ஒரு குறிப்பிட்ட சாதியையும் இழிவாகப் பேசிய சினிமா இயக்குனர் வேலு பிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தனர்.
ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் நாத்திகக் கொள்கையில் பிடிப்பு உள்ளவராக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் வேலு பிரபாகரன், ஈ.வே.ரா., கொள்கைகளின் படி சமூகத்தில் வெறுப்புணர்வைப் பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஈ.வே.ரா., கொள்கையின் படி, ஒரு குறிப்பிட்ட சாதியை திட்டுவதும் இழிவுபடுத்திப் பேசுவதுமாக இருந்தவர், அண்மையில், கடவுள் மறுப்புக் கொள்கை என்ற போர்வையில் கந்த சஷ்டி கவசத்தையும் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானையும் இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற திராவிட இயக்க அமைப்பு வெளியிட்ட வீடியோ குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, தன் பங்குக்கு ஈ.வே.ரா., கொள்கைகளின் படி இந்து தெய்வங்களை இழிவுபடுத்தியும், கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வீடியோ வெளியிட்டார். மேலும், தாம் ஒரு சேனல் பேட்டியில் கலந்து கொண்டது தொடர்பாக திராவிடர் கழகத்தின் சுப.வீ.,யுடன் பேசிய போது அவரது சாதி குறித்தும் பேசினார்.
இந்நிலையில், இந்து மத கடவுளரை இழிவுபடுத்திப் பேசியதாக, இவர் மீது இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் மகேஷ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், ‛யு-டியூப் சேனலில் ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் இந்துக்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சினிமா இயக்குனர் வேலு பிரபாகரனை கைது செய்தனர்.