மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபராக இருந்தவர் அகமது அதிப். இவர் கடந்த 2015-ம் ஆண்டு படகில் சென்றபோது, தன்னையும், தனது குடும்பத்தாரையும் கொலை செய்ய முயன்றதாக அப்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கார் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து அகமது அதிப்-ஐ மாலத்தீவு காவல்துறை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட்து, பின்னர் 15 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அதில் மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில், அகமது வீட்டுக்காவலில் வைக்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில் திடீரென அவர் தலைமறைவானார். அகமது அதிப் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடந்த 11-ம் தேதி, விர்கோ 9 என்ற சிறிய ரக கப்பல், கருங்கற்களை ஏற்றிக்கொண்டு மாலத்தீவிற்கு சென்றது. அப்போது கப்பலில் ஒன்பது ஊழியர்கள் இருந்தனர். மாலத்தீவுச் சென்ற அந்தக் கப்பல் கருங்கற்களை இறக்கி வைத்துவிட்டு கடந்த 27ம் தேதி, தூத்துக்குடி திரும்பியது. அப்போது 9 நபர்களுடன் கூடுதலாக ஒருவர் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தூத்துக்குடி துறைமுகம் அருகே 100 மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்த கப்பலில் மத்திய, மாநில உளவுத்துறை மற்றும் கடலோர காவல் படை இன்று சோதனை நடத்தினர்.
அப்போது கப்பலில் மொத்தம் 10 பேர் இருந்தனர். அதில் ஒருவர் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் இருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மாலத்தீவின் முன்னாள் அதிபர் அகமது அதிப் என தெரியவந்தது. இதையடுத்து இந்திய உளவுத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து, தூத்துக்குடி கொண்டு வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.