கடந்த சில நாள்களாகக் குஜராத் மாநிலம் தொடர் கனமழையால் பாதிப்பினை அடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினரும் காவல்துறையும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். தண்ணீர் சூழும் ஆபத்து இருக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே சென்று, அங்கு இருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் பணியும் நடைபெற்றுவருகிறது.
நேற்று காலை வரை பெய்த கனமழையால் ,வதோத்ராவின் தேவிபுரா கிராமம் நீரில் மூழ்கியது. நீரின் அளவு அதிகமானதால், அங்கு இருக்கும் மக்களை மீட்க காவல்துறை படை சென்றது. ஆனால், அப்போது கழுத்தளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
காவல்துறை அங்கே கயறு கட்டி, அதைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அங்குள்ள மக்களுக்கு உதவினர். அப்போது, ஒரு வீட்டில் ஒரு தாயும் ஒன்றரை மாத பெண்குழந்தையும் சிக்கியிருப்பது சப் – இன்ஸ்பெக்டர் கோவிந்த் சவ்டாவுக்குத் தெரிய வர, அந்த வீட்டை நோக்கி சென்றார்.
அதன் பின்னர் நடந்ததை அவரே கூறுகிறார். தேவிபுரா பகுதியில், நானும் எனது டீமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டோம். ஒரு பெண் குழந்தையும் அவரது தாயும் வீட்டில் சிக்கியிருப்பதை அறிந்து அங்கு சென்றேன். கைக்குழந்தையாக இருந்ததாலும் கழுத்தளவு தண்ணீர் ஓடுவதாலும், அவரை கையில் எடுக்க முடியாது.
அதனால், அந்தத் தாயிடம் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் டப் ஒன்றைக் கேட்டேன். அதில் கொஞ்சம் துணிகளைப் போட்டு, குழந்தையைப் பத்திரமாக அதில் வைத்து, தலையில் வைத்துப் பிடித்துக்கொண்டு வந்தேன் என ஒரு ஊடகத்தில் அவர் தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை கிலோ மீட்டருக்கு ஓடும் நீரில், அந்த பச்சிளம் குழந்தையைச் சுமந்து வந்திருக்கிறார் இந்த சப்-இன்ஸ்பெக்டர். குழந்தையின் தாயும் பத்திரமாக மீட்கப்பட்டார்.
Proud of the humanitarian work of this cop in Vadodara. Great courage & dedication. Rescued the baby & family. #VadodaraRains #sdrf #NDRF @GujaratPolice @IPS_Association pic.twitter.com/wWEVcJu3Ho
— Dr. Shamsher Singh IPS (@Shamsher_IPS) August 1, 2019
Video clip of rescue operation of baby of 45 days by cop Govind Chavda pic.twitter.com/vOgj3Fe6lv
— Dr. Shamsher Singh IPS (@Shamsher_IPS) August 1, 2019