20-ஆம் நூற்றாண்டில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் துறவிகள், மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவதில் மிகப்பெரும் பங்கு வகித்துள்ளனர். வழிவழியாக மராட்டியரும் தங்கள் முன்னோரின் வழியில் துறவிகள் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டுகளை போற்றிப் புகழ்வர். அத்துறவிகளில் ஒருவர் தான் ராஷ்டிர சந்த் துகடோஜி மஹாராஜ் ( Rashtrasant Tukadoji Maharaj).
நாம்தேவ் ஈங்லே ( Ingle)-விற்கும், மஞ்சுளா அம்மையாருக்கும் மகனாக ஏப்ரல் 30-ந்தேதி யாவளி என்னும் இடத்தில் அமராவதி மாவட்டத்தில் 1909 ஆண்டு பிறந்தார்.
‘மாணிக்’ என்று அழைக்கப்பட்டார். பள்ளிப்படிப்பை தொடர முடியா விட்டாலும், தன் குருவிடம் வாழ்க்கைப் பாடம் கற்றார். இவருடைய குருவே இவரை ‘துகட்யா’ என்று அழைப்பார்.
துகட்யாவிற்கு படிப்பை விட பஜன் பாடுவதில் அதீத ஈடுபாடு இருந்தது.
சுதந்திர காலத்தில் தனது பாட்டுத் திறமையினால் பல பாடல்களின் மூலமாக மக்களிடம் சுதந்திர வேட்கையை வித்திட்டார்.
மகாத்மா காந்தியடிகள் மற்றும் ஆச்சார்ய வினோபா பாவே போன்ற தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். துகட்யாவின் தன்னலமற்ற சேவையாலும், மக்களை ஒண்றிணைக்கும் ஆற்றலையும் கண்டு வியந்த நமது நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரஸாத், அவருக்கு ராஷ்டிர சந்த் பட்டம் அளித்தார்.
ராஷ்டிர சந்த் துகடொஜி மஹாராஜ், சுதந்திரத்துக்குப் பின்னும் அவர் தம் பஜன்களால் மக்களுக்கு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பங்கினை வலியுறுத்தினார்.
1955-ல், 5 வது உலக சமய மாநாடு ஜப்பான் நாட்டில் நடந்தது. அதில் கலந்து கொள்ளுமாறு துகடோஜிக்கு அழைப்பு வந்தது. அப்போதைய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு, துகடோஜி ஜப்பான் செலவை அரசே ஏற்கும் என்றார். துகடோஜியோ அதை ஏற்கவில்லை. மக்களும், சேவா மண்டல் உறுப்பினர்களும் அவருக்காக நன்கொடை அளித்தனர்.
ஜப்பானில் ஒரு பத்திரிக்கையாளர் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் பத்திரிக்கையாளர்கள் துகடோஜியிடம் இந்தியாவில் உள்ள பல்வேறு கலாச்சாரம் மதங்கள், சாதிகள் பற்றிக் குறிப்பிட்டு அவரை திக்குமுக்காட வைக்க முயன்ற போது துகடோஜி புன்னகையுடன் அவர்களைப் பார்த்து ” வேற்றுமையில் ஒற்றுமையே” – இந்திய காலாச்சாரத்தின் இந்திய மக்களின் சிறப்பு என்றார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் மூன்று பஜன்களை பாடினார். கூடியிருந்தோர் மூன்று முறை துகடோஜியை பாட வலியுறுத்தி கேட்டு மகிழ்ந்தனர். மாநாட்டின் முடிவில், வந்திருந்தோர் துகடோஜியின் பரந்த மனப்பான்மை, செருக்கில்லாத குணம், அனைத்து மதத்தையும் மதிக்கும் பாங்கு, அனைவரையும் அரவணைத்து செல்லும் குணம் முதலியவற்றை குறிப்பிட்டனர்.
இவருடைய ‘கிராம் கீதா'( Gram Geeta) என்னும் நூலில் கிராம வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காவும் பல அற்புதமான வழிகளை உணர்த்தியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள பல அம்சங்கள் இன்றும் கிராம முன்னேற்றத்திற்கு அடிகோளாய் திகழ்கிறது.
மாணவர்களின் கல்வியானது அவர்கள் வாழ்க்கைப் பாடத்திற்கும் உதவ வேண்டும் என்பார். அதனால் நாக்பூர் பல்கலைக்கழகத்திற்கு ராஷ்டிர சந்த் துகடோஜி மஹாராஜ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1961-ம் வருடம், மே 14 முதல் 19 வரை தமிழகத்தில் அவருடைய இந்திய கிஸான் யாத்ரா நடைப்பெற்றது. அவருடைய பஜன் சென்னை வானொலியில் மே 14- ந் தேதி பதிவு செய்யப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, தனுஷ்கோடி, கன்னியாகுமரி மற்றும் மதுரை நகரங்களை அவர் விஜயம் செய்தார்.
இந்த மாபெரும் மாணிக்கம் தன்னுடைய 55 – வது வயதில் அக்டோபர் 11-ந் தேதி,1968 ஆண்டு மோஜ்ரி என்னும் இடத்தில் அமராவதி மாவட்டத்தில் மறைந்தார். இன்றும் அவர் மறைந்த தினத்தன்று சரியாக மாலை 4.58 மணிக்கு மோஜ்ரியில் மௌனம் அனுசரிக்கப் படுகிறது.
பல வெளிநாட்டவரும் பங்குக்கொண்டு துகடோஜி மஹாராஜாவுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்துகின்றனர். அவர் மறைந்தாலும், அவர்தம் கருத்துக்கள் இன்றும் மக்களை வழி நடத்துபவையாய் உள்ளன.
வாழ்க துகடொஜி மஹாராஜ் ! வளர்க அவர் புகழ்!!
– ஜெயஸ்ரீ எம் சாரி, நாக்பூர்