பெரு நாட்டில் கட்டுப்பாடுகளை மீறி நடந்த இரவு பார்ட்டியில் திடீரென காவல்துறை ரெய்ட் நடத்திய போது தப்பி ஓட முயன்ற 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை இரவு லிமாவின் லாஸ் ஒலிவோஸ் மாவட்டத்தில் உள்ள தாமஸ் ரெஸ்டோபார் கிளப்பில் கட்டுப்பாடுகளை மீறி இரவு பார்ட்டி நடந்துள்ளது.
அருகாமையில் இருந்த மக்கள் இரவு பார்ட்டி நடப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவயிடத்திற்கு விரைந்த சுமார் 60 போலீசார் திடீர் சோதனைில் ஈடுபட்டனர், மேலும் பார்ட்டியில் கலந்துக்கொண்ட நபர்களை வெளியேற்ற முயன்றுள்ளனர்.
இரவு பார்ட்டியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் சுமார் 120 பேர் போலீஸ் வருவதை கண்டவுடன் அங்கிருந்த ஒரே ஒரு நுழைவு வாயில் வழியாக தப்பி ஓட முயன்றுள்ளனர்.
இதன் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர், மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 6 பேர் காயமடைந்தனர். .
இறந்த 13 பேரில் 11 பேர் கொரோனா உறுதியானதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், போலீஸாரால் கைது செய்யப்பட்ட 23 பேரில் 15 பேருக்கு கொரோனா உறுதியானதாக ஜனாதிபதி மார்ட்டின் விஸ்கர்ரா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 13 பேர் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 12 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என்று அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்தினர்.
பெரு மார்ச் மாதத்தில் இரவு விடுதிகள் மற்றும் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதுடன், ஆகஸ்ட் 12 ஆம் தேதி நீட்டிக்கப்பட்ட குடும்பக் கூட்டங்களுக்கு தடை விதித்தது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது.
கிளப்பின் உரிமையாளர்கள் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் போலீசார் கண்ணீர்ப்புகை அல்லது துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.