உலகக் கோப்பை டி20 போட்டிகள் – ஐந்தாம் நாள் – 20 அக்டோபர் 2022
இலங்கை, நெதர்லாந்து அணிகள் அடுத்த சுற்றிற்கு தகுதி பெற்றன
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்று தகுதிச் சுற்று ஆட்டங்களில் குரூப் A பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் இலங்கைக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் நமீபியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டு அணிக்கும் இடையே நடந்தது. இந்த ஆட்டங்களுக்கு முன்னர் நெதர்லாந்து 4 புள்ளிகளுடன் குரூப்பில் முதலிடம் வகித்தது. இலங்கையும் நமீபியாவும் தலா இரண்டு புள்ளிகளுடன் இருந்தன. நெதர்லாந்து வெற்றிபெற்றால் அது ஆறு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும்; இஅல்ங்கை வெற்றிபெற்றால் நெதர்லாந்தும் இலங்கையும் தலா 4 புள்ளிகளுடன் சமமாக இருக்கும். இரண்டாவது ஆட்டத்தில் நமீபிய அணி எளிதில் வெற்றிபெறும் என அனைவரும் எண்ணினர். எனவே நமீபியாவும் நெதர்லாந்தும் அல்லது நமீபியாவும் இலங்கையும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் உலகமே கணித்துக்கொண்டிருந்த வேளையில் இன்றைய ஆட்ட முடிவுகள் வேறுவிதமாக வந்தன.
முதல் ஆட்டம் ஐக்கிய அரபு எமிரேட்டு-நமீபியா
ஐக்கிய அரபு எமிரேட்டு அணி (148/3, முகம்மது வசீம் 50, ரிஸ்வான் 43, பாசில் ஹமீது 25, அரவிந்த் 21) நமீபிய அணியை (20 ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 141, டேவிட் வீஸ் 55, ரூபன் 25, ஹமீது 2/17, சாஹூர் கான் 2/20) ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்டு அணி மெதுவாக தங்களது ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் பத்து ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 58 ரன் எடுத்திருந்த அந்த அணி 100 ரன்னை அடையும்போது 16 ஓவர் ஆகியிருந்தது. அடுத்த நாலு ஓவர்களில் மீதமுள்ள ரன்களை அடித்து 20 ஓவரில் 148 ரன் கள் எடுத்தது.
அடுத்து ஆடவந்த நமீபிய அணி மிக மோசமாகத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மைக்கேல் லிங்கன் (10 ரன்), ஸ்டீபன் பார்ட் (4 ரன்) மூன்று ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். 13ஆவது ஓவரில் அந்த அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் வீஸ் (55 ரன்), ரூபன் (25 ரன்) இருவரும் அணியை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் கடைசி ஓவரில் 14 ரன் அடிக்க முடியாமல் நமீபிய அணி தோல்வியடைந்தது.
இரண்டாவது ஆட்டம், இலங்கை-நெதர்லாந்து
இலங்கை அணி (162/6, குசால் மெண்டிஸ் 79, அசலங்கா 31, பால் 2/25, லீட் 2/31) நெதர்லாந்து அணியை (20 ஓவரில் 9 விக்கட் இழப்பிற்கு 146 ரன், மேக்ஸ் ஓ டவுட் 71, வனிந்து ஹசரங்கா 3/28) 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. பதும் நிசங்கா (14 ரன்), தனஞ்சய டி சில்வா (0 ரன்) இன்று சரியாக ஆடவில்லை. சரித் அசலங்கா, குசால் மெண்டிசுடன் சேர்ந்து 14ஆவது ஓவர் வரை ஆடினார். குசால் 19.2 ஓவர் வரை ஆடினார். இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 162 ர்ன் எடுத்திருந்தது.
பின்னர் ஆடிய நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் ஓ டவுட் தவிர வேறு எவரும் நிலைத்து ஆடவில்லை. நான்கு வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். எனவே நெதர்லாந்து அணியால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு 146 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றிகளால் சூப்பர் 12 சுற்றில் இலங்கை அணி குரூப் 1 பிரிவிலும் நெதர்லாந்து அணி குரூப் 2 பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.