குரூப்-4 தேர்வில் பிழைகள் குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை டிஎன்பிஎஸ்சி அமைக்க உள்ளது.
குரூப்-4 தேர்வில் வினாத்தாள் பிழைகள் குறித்து விசாரிக்க ஒரு நிபுணர் குழுவை டிஎன்பிஎஸ்சி அமைக்க உள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி., காலியாக உள்ள 6491 அரசு பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வை செப்.1 ஞாயிறு அன்று நடத்தியது.
இதில் 13.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வில் குடியரசு தின தேதி உள்ளிட்ட சில வினாக்கள் தவறாக இருந்தது என்று புகார்கள் எழுந்துள்ளன.
இந்தப் புகார்களை விசாரித்து பிழைகளை சரி செய்வதற்கு டிஎன்பிஎஸ்சி சார்பில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது! இந்தக் குழுவில் இடம் பெறும் துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வினாத் தாளை ஆய்வு செய்து டிஎன்பிஎஸ்சி.,க்கு அறிக்கை வழங்குவர்!
அதன்படி தேர்வு எழுதியவர்களுக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வினாத்தாள் தொடர்பாக உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு அது தொடர்பாகவும் தேர்வு எழுதி அவர்களிடம் கருத்து கேட்கப்படும்! அதன் அடிப்படையில் நிபுணர் குழு விசாரித்து உரிய முடிவு எடுக்கும் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன!