17 வயது சிறுவன் ஒருவர் தன் வாழ்க்கையில் பெரும்பாலும் நொறுக்குத்தீனியை மட்டுமே உண்டு வாழ்ந்ததால் அவருக்கு கண்பார்வை பறிபோகியுள்ளது.
இதனையடுத்து, நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடக்கூடாது என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சிறுவயதிலிருந்தே இந்த சிறுவன் உருளை வருவல் , பிரிங்கில்ஸ் சிப்ஸ் வகைகள் மற்றும் வைட் பிரட் ஆகியவற்றையே உண்டு வந்துள்ளார். நடுநடுவே பன்றிக்கறி அல்லது மாட்டுக்கறியோ சாப்பிடுவாராம்.
இதனால் அந்த சிறுவனுக்கு வைட்டமின் குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டதாக பரிசோதனைகளில் தெரிய வந்தது. அவரது 14 வயதில் உடல்நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது வைட்டமின் பி 12 குறைபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சையை முறையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஊட்டச்சத்தான உணவுகளையும் எடுத்துக் கொள்ளவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து, அவருக்கு கண் பார்வையில் சிக்கல் ஏற்பட்டதால் பிரிஸ்டல் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரது உணவு வெறும் கிப்ஸ் மட்டுமே. பிரிங்கில்ஸ் போன்ற சிப்ஸ்களையும் அவர் வாங்கி சாப்பிட்டுள்ளார். அவ்வப்போது, வைட் பிரட் மற்றும் பன்றிக்கறி எடுத்துக் கொண்டுள்ளார். காய்கறி, பழங்களை அவர் உண்ணவில்லை” என்கிறார் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் டெனிஸ் அடன்.
அந்த இளைஞருக்கு வைட்டமின் 12 குறைபாடோடு மற்ற பிற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தொடர்பான குறைபாடும் ஏற்பட்டது. காப்பர், செலினியம் மற்றும் வைட்டமின் டி போன்ற எதுவும் அவரது உடலில் இருக்கவில்லை என அடன் மற்றும் அவருடன் பணியாற்றிய மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் எடையை பொருத்தவரையில் குறைவானவராகவும் இல்லை. அதிகமானவராகவும் இல்லை. ஆனால் சரியான உணவு முறையை பின்பற்றாததால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுகள் அவருக்கு இருக்கிறது.
அவரது எலும்புகளில் எந்த மினரல்களும் இல்லை. இந்த வயதில் இருக்கும் ஒரு இளைஞரின் உடல் இப்படி இருப்பது அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.”
கூடுதலான வைட்டமின்கள் கொடுக்கப்பட்டு, உணவு முறை நிபுணர் மற்றும் மனநல ஆலோசனைக்குழுவிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கண் பார்வையை பொறுத்தவரை, அவர் பார்வையற்றோர் பிரிவிலேயே தற்போது உள்ளார்.
இந்த சிறுவனுக்கு இருப்பது Nutritional optic neuropathy. இதனை விரைவாக கண்டுபிடித்திருந்தால், சரி செய்திருக்கலாம். ஆனால், பல நாட்கள் ஆகியிருந்தால், கண்களின் பார்வை நரம்பில் இருக்கும் நரம்பு இழைகள் செயலிழந்து நிரந்தரமாக கண்பார்வையை இழக்க நேரிடும்.
ஒழுங்கான உணவு முறையை பின்பற்றவில்லை என்றால் இது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று பெற்றோர் அறிந்து வைத்திருக்க வேண்டும். நிபுணர்களின் உதவியை நாட வேண்டும் என்று மருத்துவர் அடன் தெரிவித்தார்.
தற்போது இந்த சிறுவனால் கார் ஓட்டவோ படிக்கவோ, தொலைக்காட்சியை பார்க்கவோ கடினமாக இருக்கும். ஆனால் இவரால் தானாகவே யார் உதவியும் இல்லாமல் நடக்க முடியும்” என்று அடன் கூறினார்.
வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும், அவை சத்தான உணவுக்கு நிகராகாது என்கிறார் அவர்.