தந்தையை ஏமாற்றி மகள் பணத்தை பறிக்க முயன்ற சம்பவமானது கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் வசித்து வருபவர் ஆறுமுகம் இவருக்கு வித்யா.என்ற மகள் உள்ளார். இவர் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
வியாழக்கிழமை அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வித்யா தன்னுடைய சகோதரருக்கு வாட்ஸ்அப் கால் செய்துள்ளார். அந்த காலில் தன்னை மர்ம நபர் ஒருவர் கடத்தி விட்டதாகக் கூறி அழுதுள்ளார். உடனடியாக செல்போன் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
5 மணி நேரம் கழிந்த பின்னர் வித்யாவின் தந்தைக்கு கால் வந்துள்ளது. அழைப்பில் பேசியவர் வித்யாவை உயிருடன் பார்க்க வேண்டுமானால் 10 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் இல்லையெனில் வித்யாவை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் கிருஷ்ணகிரியிலிருந்து கோயம்பேடுக்கு வந்து காவல்நிலையத்தில் புகாரளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து வித்யாவை தேடி வந்தனர். கோயம்பேடு பேருந்தில் அமைத்திருந்த சிசிடிவி கேமராக்களை கண்காணித்தபோது வித்யா சாதாரண செல்போன் வைத்து இருந்ததாக தெரிந்தது.
அவருடைய நம்பரை ட்ரேக்கிங் செய்து பார்த்த போது சென்னை மீனம்பாக்கத்தில் வித்யா கால் செய்துள்ளது தெரியவந்தது. பின்னர் அந்த மொபைல் நம்பர் புதுச்சேரி காரைக்காலுக்கு சென்றுள்ளது. உடனடியாக காவல்துறையினர் காரைக்கால் சென்றனர். அங்குள்ள கல்லூரியில் தான் வித்யா நர்சிங் படிப்பு படித்து வந்தார்.
புதுச்சேரியில் வித்யாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான அக்ஷயாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், வித்யா மனோஜ் என்பவரை காதலித்து வந்தாகக் கூறியுள்ளார்.
காவல்துறையினர் மனோஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனக்கும், இந்த சம்பவத்திற்கும் சம்பந்தமில்லையென்று கூறியுள்ளார். தற்போது அவர் மலேசியாவில் பொறியியல் படித்துவிட்டு கடலூரில் வசித்து வருவதாகவும் கூறினார்.
வேண்டுமென்றால் நேரில் ஆஜராவதாக ஒப்புதலளித்தார்.
அப்போது காவல்துறையினர் அவரை கடலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போதும் மனோஜ் ஒப்புக்கொள்ளவில்லை.தகுந்த முறையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது மனோஜ் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டார்.
இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒரு கடத்தல் நாடகத்தை போட்டு வெளிநாட்டிற்கு சென்று கலப்புத்திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் கூறினார்.
கனடாவுக்கு செல்ல அதிக பணம் தேவைப்படும் என்பதால் தன்னுடைய தந்தை நிலத்தை விற்று 14 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். வித்யாவுடன் இந்த கடத்தல் நாடகத்தைப் போடு 10 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அதற்குள் அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கி கொண்டனர். இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது கோயம்பேட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.