வங்கிகள் இணைக்கப்படுவதைக் கண்டித்து நாடு முழுவதும் வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய வங்கிகள் முடிவெடுத்துள்ளன. 4 வங்கி அதிகாரிகள் சங்கங்கள் இணைந்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
பொதுத்துறை வங்கிளான இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் வேறு 10 வங்கிகளை இணைப்பதற்கான நடவடிக்கையை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 12ஆகக் குறையும்
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்களிடையே கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன .
இந்த நிலையில்தான் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் அடங்கிய 4 சங்கங்கள் இந்த வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி வரும் 25ஆம் தேதி நள்ளிரவு முதல் 27ஆம் தேதி நள்ளிரவு வரை அவர்கள் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அதிகாரிகள் தவிர பிற ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என்றாலும், அந்த 2 நாட்களிலும் வங்கிப் பணிகள் முழுமையாக முடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 28ஆம் தேதி கடைசி சனிக்கிழமை என்பதாலும், 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அந்த 2 நாட்களும் வங்கிகள் இயங்காது.
ஆக, வரும் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய 4 நாட்களிலும் வங்கிப் பணிகள் எதுவும் நடக்காது எனத் தெரிகிறது.
மேலும், இந்த 4 நாட்களிலும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியும் நடக்காது அதனால் , பொதுமக்கள் முன்கூட்டியே செலவுக்குத் தேவையான பணத்தை எடுத்து வைத்துக் கொள்வதுடன் வங்கிகளில் உள்ள பணியினையும் முடித்துக் கொள்ள வேண்டும்.